ரவூப், ஜூன் 28-
மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத் தேர்தலில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கும் கள்ள வாக்கு விவகாரத்திற்கும் முறையே தீர்வு காணப்படாத நிலையில், தேர்தலை ஒட்டி ஆலயத்தின் அதிகாரப்பூர்வ தலைவரை அறிவிக்கும் அதிகாரத்தை அறுவர் அடங்கிய தேர்தல் குழு கொண்டிருக்கவில்லை என்று வலியுறுத்தி, நடப்புத் தலைவர் டத்தோ க.தமிழ்செல்வன் போலீஸ் புகார் செய்துள்ளார்.
தேர்தலுக்காக அச்சிடப்பட்ட 500 வாக்குச் சீட்டுகளை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ணிப் பார்த்து உறுதி படுத்தத் தவறிய தேர்தல் குழுவினர், பின்னர் நீண்ட வரிசையில் நின்ற வாக்காளர்களின் அடையாளத்தை மறு உறுதிப்படுத்தாமல் வாக்குச் சீட்டை வழங்கி, தேர்தலின் அடிப்படை விதிமுறைகளை மீறியுள்ளனர் என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் குழுவில் மஇகா தலைவர்களான டத்தோ எம்.பி.நாதன், டத்தோ எம்.தேவேந்திரன், என்.சுப்பிரமணியம், ஜி.அரிகிரும்ஷ்ணன், டி.சிவபிரகாசம், எம்.தர்மகவுண்டர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
தனது போலீஸ் புகாரில் இந்த அறுவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ள டத்தோ தமிழ்செல்வன், அப்புகாரில் மேலும் தெரிவித்திருப்தானது:-
தேர்தல் குழுவினர் வாக்களிப்பு பகுதியை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை. வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தியப் பின், அப்பகுதியை விட்டு வெளியேறாமல் அங்கேயே கும்பலாக இருந்தனர்.
பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 462. தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்கையில், மொத்தம் 461 வாக்குகள் கிடைத்திருப்பதாக தேர்தல் குழு தெரிவித்தது.
இதில் எனக்கு 206 வாக்குகளும், பி.ராமனுக்கு 250 வாக்குகளும் கிடைத்தன. செல்லா வாக்குகள் 5. பயன்படுத்தப்படாத வாக்குச் சீட்டுகள் 54. ஆக மொத்தம், 515 வாக்குச் சீட்டுகள் வாக்குப் பெட்டிக்குள் இருந்தன.
இதற்கு முன்னதாக தங்களிடம் 500 வாக்குச் சீட்டுகள் இருப்பதாக தேர்தல் குழுவினர் அறிவித்தனர். பிறகு, வாக்குப் பெட்டிக்குள் கூடுதலாக 15 வாக்குகள் எங்கிருந்து எப்படி வந்தன?
கண் முன் கள்ள வாக்குகள் இருப்பது உறுதியான நிலையில், உறுப்பினர் அல்லாதோருக்கும் வாக்குச் சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மற்றொரு நிலவரத்தில், 2.00 மணிக்கு தொடங்கப்படவிருந்த பொதுக்கூட்டம், தாமதமாக 2.40 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் தேர்தலும் தாமதமாகலாம் என்று கருதிய சுமார் 15 முதல் 20 உறுப்பினர்கள், வாக்களிப்பு தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே என்னிடம் முறையே சொல்லிவிட்டு விடைபெற்றனர்.
இந்நிலையில், 461 வாக்களர்கள் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் குழுவினர் அறிவித்ததில் எனக்குப் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், பகாங் மாநிலத்தை வசிப்பிடமாகக் கொண்டிராத ஒரு கும்பல் வாக்களித்திருப்பதாக எனது ஆதரவாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலய சட்டவிதிகளின் படி, பகாங் மாநிலத்தை வசிப்பிடமாகக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் 15 கள்ள வாக்குகள் ஊடுருவியிருந்ததால் எனது ஆதரவாளர்கள் தேர்தலை ரத்துச் செய்யக் கோரினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, தேர்தல் முடிவு குறித்து ஆர்.ஓ.எஸ். பதில் சொல்லட்டும் என்று கூறிய தேர்தல் அதிகாரிகள், மாரான் மாவட்ட போலீஸ் தலைவரின் மேற்பார்வையோடு, வாக்குப் பெட்டிகளை பூட்டுப் போட்டு, மாரான் சுங்கை ஜெரிக் போலீஸ் நிலைய லாக்காப்பில் வைத்தனர்.
மறுநாள் திங்கட்கிழமை, வாக்குப் பெட்டிகளை குவாந்தான் ஆர்.ஓ.எஸ்.க்குக் கொண்டுச் சென்றனர். எனது பிரதிநிதியாக ரவி வடிவேலு சென்றார். அங்கு ஆர்.ஓ.எஸ். அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் எனக்கு மேலும் இரண்டு வாக்குகள் குறைந்திருந்தன.
இதனைக் கண்டு ஆர்.ஓ.எஸ். அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது எனக்கும் பேரதிர்ச்சி ஏற்படுத்தியதோடு, இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதற்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்திவிட்டது என்று டத்தோ தமிழ்செல்வன் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஆர்.ஓ.எஸ்.அதிகாரிகள் இவ்விவகாரத்தில் நாங்கள் எந்த முடிவும் கொடுக்க முடியாது என்று தெரிவித்ததோடு, ஆலயத்தின் சட்டவிதிக்கு உட்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஆலோசனை கூறியுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில், ஓர் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்து, மறுதேர்தல் நடத்துவதற்கு ஆலய நிர்வாகம் முயற்சித்து வரும் நிலையில், அன்றையத் தேர்தல் முழுமைப் பெறாமால் நிறுத்தப்பட்டதால், இன்னமும் நானே அதிகாரப்பூர்வ தலைவர் என்று டத்தோ தமிழ்செல்வன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அவசரக் கூட்டம் நடத்துவதற்கு முன், தேர்தல் குழுவினர் தங்கள் வசமுள்ள வாக்குச் சீட்டுகளை, பொதுக்கூட்டம் நடைபெற்ற நாள் தொடங்கி 7 நாட்களுக்கும் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். தவற்னால் தேர்தல் குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ தமிழ்செல்வன் குறிப்பிட்டார்.
மற்றொரு நிலவரத்தில்,தேர்தல் குழுத் தலைவர் என்ற முறையில், டத்தோ எம்.பி.நாதன் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ தலைவர் பி.ராமன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்ததாகச் சுட்டிக்காட்டிய டத்தோ தமிழ்செல்வன், அவர் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்றார்.
தேர்தல் குழுவில் நியமிக்கப்பட்ட டத்தோ எம்.பி.நாதனை, அக்குழுவின் தலைவராக யாரும்
முன்மொழிந்து வழிமொழியவில்லை. அவர்தான் தேர்தல் குழுத் தலைவர் என்று அன்றைய பொதுக்கூட்டக் குறிப்பிலும் குறிப்பிடவில்லை.
மேலும், தேர்தலில் முறைகேடு நிகழ்ந்திருப்பதால், தேர்தல் அங்கம் முழுமைப்பெறாமல் தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டது. அந்தத் தேர்தல் நிறுத்தப்பட்டது முதலே அந்தத் தேர்தல் குழுவினர் தங்களின் அதிகாரத்தை இழந்து விட்டனர்.
இந்நிலையில் அந்த அறுவர் அடங்கிய குழுவினர், குறிப்பாக டத்தோ எம்.பி.நாதன், தலைவர் பதவிக்காக நடந்த தேர்தல் அடிப்படையில் யார் ஆலயத்தின் தலைவர் என்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட முடியாது! மாறாக, தேர்தலில் நடந்துள்ள குளறுபடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் அக்குழுவினர் பதில் சொல்ல வேண்டும் என்று டத்தோ தமிழ்செல்வன் குறுப்பிட்டார்.
தேவை ஏற்பட்டால், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- காளிதாசன் இளங்கோவன்