BREAKING NEWS
(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர், ஜூன் 14:
இந்தியாவில் மதம் தொடர்பான சர்ச்சைப் பேச்சினால், அங்கு இரு மதங்களுக்கு இடையிலான பிரச்னை பூதாகரமாக உருவெடுத்து புகைச்சலை எற்படுத்திவரும் நிலையில், நம் நாட்டிலும் சில அமைப்புகள் இது தொடர்பான கண்டனங்களைத் தெரிவித்து இந்திய தூதரகத்தின் முன் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
ஆனால், எங்கேயோ தங்கள் சுயநல அரசியலுக்காக மதம் பிடித்த அரசியல் விஷமிகள் சொறிந்து கொண்டு வேடிக்கை காட்டும் நிலையில், இங்கே பல்லின மக்களும் ஒற்றுமையாய் இருக்கும் நம் தேசத்தில் அந்த விஷம் பரவி விடக் கூடாது என்பதில் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது மிக மிக அவசியம்.
ஏனெனில், இங்கும் அந்தப் பிரச்னையின் எதிரொலியாக சில சதி வேலைகள் நடப்பதாகத் தெரிகிறது.
இங்கு பிழைப்பு தேடி வந்த சிலர், மதம் பிடித்த விஷக்கிருமிகளைப் போல் அங்கு நடந்த சர்சைப் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து, நம் மலேசியாவில் டிக் டோக் காணொளி செய்து விஷத்தை விதைக்கின்றனர்.
அதிலும், மலேசிய தமிழர்களின் பொக்கிஷமான பத்து மலை திருத்தலத்தில் இந்தக் கும்பல் நின்றுகொண்டு முழுக்க முழுக்க வட மொழியில் அந்தச் சர்சை உரையை கொடுத்தவருக்கு ஆதரவாகவும், இன்னொரு மதத்தைக் கண்டித்தும் பேசி உள்ளனர்.
இவர்களின் பேச்சைக் கண்டித்து ஒருவர் காணொளி செய்துள்ளார். இந்த வட மொழி பேச்சு இந்த நாட்டில் உள்ள மிக பெரிய சமூகத்திற்குப் புரிந்தால், இங்கு உள்ளவர்கள் இடையே சர்சை ஏற்படும். அதுவும், மலேசியாவின் முக்கிய திருத்தலத்தில் இருந்து இவர்கள் இந்தக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் .
ஆகையால், இப்படி மதம் பிடித்த விஷக் கிருமிகள் ஆலய வளாகத்தில் செய்யும் நடவடிக்கைகளை ஆலய நிர்வாகம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
குறிப்பாக , மலேசியாவின் தாய்க் கோவிலான ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் மலேசியா நாட்டிற்கு வேலைக்காக வரும் அந்நியத் தொழிலாளர்களால், இந்த நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடாது.
ஆகையால், அந்நியத் தொழிலாளர்கள் இப்படிப்பட்ட மத சர்ச்சையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது நம் நாட்டின் அமைதியைக் கெடுக்கும்.
மனிதவள அமைச்சு இவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறது? இந்த மாதிரி சர்ச்சையில் ஈடுபடும் அந்நியத் தொழிலாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
இந்தச் சர்ச்சையான நடவடிக்கையை மனிதவள அமைச்சின் பார்வைக்கு தமிழ் லென்ஸ் கொண்டு வந்துள்ளோம்.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம் சரவணன் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா?