loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

உலு சிலாங்கூர், மார்ச் 15
அரசியல் எல்லைகளைத் தாண்டி மருத்துவத் தொண்டின் மூலம் சமூகத்தின் பேராதரவைப் பெற்றுவரும் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன், கடந்த வெள்ளிக்கிழமை சமத்துவ நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தி அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார்.


நோன்பு மாதத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக இணைந்து நோன்பு துறப்பில் கலந்து கொள்ள வேண்டும்; அதில் நமது ஒற்றுமை பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்தார்.

விருந்தோம்பலுடன் இலக்கிய நிகழ்ச்சியும் சமூக நலத்திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ரவாங், கோல குபு பாரு, பாதாங் காளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியதுடன், திருக்குர்ஆன் நூலையும் வழங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் டாக்டர் சத்ய பிரகாஷ்.


அதேபோல் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பௌத்த சமய நூல்கள், கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பைபிள், இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பகவத் கீதை ஆகியவற்றையும் அன்பளிப்பாக வழங்கினார்.


இதன் மூலம் உலு சிலாங்கூர் மக்கள் அனைத்து சமயங்களையும் கலாச்சாரங்களையும் மதித்து, ஒற்றுமையை விரும்பும் மக்கள் என்பதை சிலர் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


மேலும், யார் எவ்வாறு கபடநாடகம் ஆடியாலும் மலேசியர்களின் ஒற்றுமையை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று டாக்டர் சத்ய பிரகாஷ் தெரிவித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 15
30 ஆண்டுகளாக இந்த நாட்டில் பல சமூக மக்களுக்கு உதவி செய்து வரும் கெபிமா இயக்கம், 27-வது முறையாக நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்கள் மற்றும் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புகளும் உணவுப் பொருட்களும் வழங்கியது. இந்த நிகழ்ச்சி நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.


இந்த நாட்டின் மக்கள் பெருநாள் காலங்களில் சந்தோஷமாகவும் ஒற்றுமையுடனும் பெருநாளைக் கொண்டாடும் வகையில் கெபிமா கடந்த 27 ஆண்டுகளாக இந்த உதவியை செய்து வருவதாக, கெபிமாவின் தோற்றுநர் ஜனாப் முகமது பின் காதிர் அலி தெரிவித்தார்.


சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்களை பார்த்து மிகவும் வருத்தம் அடைவதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவின் அடையாளமே பல்லின மக்களின் சமயத்தையும் கலாச்சாரத்தையும் மதித்து ஒற்றுமையாக வாழும் நாடு என்பதே என்று அவர் குறிப்பிட்டார்.


இந்த ஒற்றுமையை கட்டிக் காக்க நம் முன்னோர்கள் செய்த தியாகங்களும் நடவடிக்கைகளும் சில மதவெறி நபர்களால் ஒரு நொடியில் சிதைந்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.


இப்போதே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் இந்த நாட்டின் அடையாளமும் அமைதியும் பாதிக்கப்படும் என மூத்த சமூக சேவகரான ஜனாப் முகமது பின் காதிர் அலி கவலை தெரிவித்தார்.
அதே நேரத்தில் இஸ்ரேல்–அமெரிக்கா–ஈரான் மோதலால் பல நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சாணக்கியமான முன்னேற்பாடுகளை செய்து, அதே நேரத்தில் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை தாம் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.


அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்ததும், நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்ச்சிகளை ரத்து செய்ததும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இருப்பு நிலையை சரியாக பராமரித்து வருவதும் பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் டத்தோ வீர நைனா முகமாட் பின் சுல்தான் அப்துல் காதிர், முகமாட் பின் அப்துல் காதிர், டத்தோ ஹாஜி ஹிஷாமுடீன், டான் ஸ்ரீ உபையத்துல்லா, டத்தோ ஹாஜி டாக்டர் சையட் இப்ராஹிம், டத்தோ சேக் ஜமீல், அலி சாஜாஹான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மேலும், கெபிமா தலைவர் முகமட் இப்ராஹிம் தலைமையில் சங்கம் சிறப்பாக செயல்பட்டு பல புதிய சிந்தனைகளை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது என அவர்கள் இப்ராஹிம் அவர்களை பாராட்டினர்.


செய்தி : வெற்றி விக்டர்

பிரிஸ்பேன், மார்ச் 15-
பிரிஸ்பேனில் நடைபெற்ற 2026 ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் மலேசியாவின் தேசிய ஸ்குவாஷ் நட்சத்திரமான சி. சிவசங்கரி பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்று 13 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நிபுணத்துவம் பெற்ற ஸ்குவாஷ் சங்கம் (PSA) இந்த  தங்க நிலை போட்டியின்  தொடரில் முதல் தரவரிசை பெற்றிருந்த சிவசங்கரி, இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஏழாம் தரவரிசை வீராங்கனை மரினா ஸ்டெஃபனோனியை 3-0 (11-7, 11-4, 11-8) என்ற கணக்கில் வென்றார்.

பிரிஸ்பேனில் உள்ள சவுத் பேங்க் பியாச்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டி வெறும் 28 நிமிடங்களில் முடிவடைந்தது.

இந்த வெற்றி, கடந்த ஆண்டு பிப்ரவரியில் 'சின்சினாட்டி கேய்னர் கப்' போட்டியில் எகிப்தின் அமாண்டா சொபியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கிடைக்கப்பட்ட சிவசங்கரியின் முதல் பட்டமாகும்.

இதற்கு முன் நடைபெற்ற அரையிறுதியில், 27 வயதான சிவசங்கரி பெல்ஜியத்தின் நான்காம் தரவரிசை வீராங்கனையான நேலே கிலிஸை என்பவரை 11-8, 13-11, 11-4 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

கோலாலம்பூர், மார்ச் 15-
சமீபகாலமாக ஒரு சில தரப்பினரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் இன - மத ரீதியிலான தூண்டல் நடவடிக்கைகள், பொதுப் பாதுகாப்புக்கும் நாட்டின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இத்தகைய சூழலில், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலான இச்செயல்களை ஒடுக்க அரசாங்கம் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளை மலேசிய இந்தியச் சமூக அமைப்புகள் ஒருமனதாக வரவேற்றுப் பாராட்டியுள்ளன.

முன்னதாக, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் இத்தகைய தூண்டுதல் ஏஜெண்டுகளின் செயல்களைக் கடுமையாகச் சாடியதோடு, நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய, இப்பிரச்சினையை அமைச்சரவைக் கூட்டத்திற்கும் கொண்டு சென்றார்.

அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு எதிராக, அரசாங்கம் அரச மலேசிய போலீஸ் படையின் மூலம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியதற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்குப் பல்வேறு இந்திய வணிகச் சங்கங்கள் தங்களது நன்றியையும் பாராட்டையும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.

இது குறித்து மலேசிய இந்திய வர்த்தக, தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் - மைக்கி (MAICCI) தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் கூறுகையில், பிரதமர் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் ‘மலேசியா மடாணி’ கொள்கையின் கீழ் இந்தியச் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் தெளிவான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது என்றார்.

தூண்டுதல் ஏஜெண்டுகளைக் கைது செய்து தண்டிப்பதன் மூலம், இந்தியச் சமூகத்தின் குரலுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதுடன் பல்லின சமூக அமைதியைப் பேணுவதில் தனது உறுதியை நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக, தொழில்துறை சங்கத்தின் - மிம்காய்ன் (MIMCOIN) தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் பி.வி. அப்து, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணும் அரசாங்கத்தின் முயற்சிக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

மலேசியா சுதந்திரம் அடைந்தது முதல் பல தசாப்தங்களாகப் பல்வேறு இன மக்கள் இணக்கமாக வாழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் தனித்துவமான ஒற்றுமையைச் சிதைக்க முயலும் எவருக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

அதேபோல், கோலாலம்பூர் - சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழில்துறை சங்கத்தின் (KLSICCI) தலைவர் நிவாஸ் ராகவன், இந்திய வணிகச் சமூகம் அரசாங்கத்துடன் இணைந்து அமைதியைப் பாதுகாக்கும் என்றும், எவ்விதமான இன-மதத் தூண்டல்களையும் நிராகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் இருக்கும் இச்சமயத்தில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தின.

இனங்களுக்கிடையிலான இணக்கமான உறவே நாட்டின் பொருளாதாரத் தாரக மந்திரம் என்றும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறவும் வணிக வளர்ச்சியை உறுதி செய்யவும் அமைதியான சூழல் அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கிடையில், மார்ச் 14 அன்று போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறுகையில், ஜம்ரி வினோத் - தமீம் தஹ்ரி ஆகிய இரு நபர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் 505(பி) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது அவ்விருவரும் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யத் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஷா ஆலம், மார்ச் 14-

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சதுரங்கப் போட்டியில் 548 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநில தொடர்புக் குழு, சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், எம்ஜஇடி, ஏம்ஸ்ட் ஆகிய இணைந்து இந்த சதுரங்கப் போட்டியை நடத்தினர்.

மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் சிறப்பான விளையாட்டு இதுவாகும். 

நம் மாணவர்கள் இந்த விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளது இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துகிறது.

நம் சிந்தனை மட்டுமல்லாமல் எதிரியின் சிந்தனையையும் தெரிந்து கொள்ளும் ஆட்டம் இதுவாகும் என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த போட்டி நிகழ்ச்சியில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர் டத்தோ முருகையா, சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ ஐயங்கர் உட்பட மஇகாவினரும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.