loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்


கோலாலம்பூர், மார்ச் 6– 
பல மதங்கள் மற்றும் பல இனங்கள் கொண்ட மலேசிய சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதில் மடானி அரசாங்கம் தோல்வியடைந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோகா பால மோகன்.

சமீபத்தில் சில பொறுப்பற்ற கும்பல் ஒரு இந்து கோவிலை இடிக்க பொதுவெளியில் மிரட்டல் விடுத்திருப்பது தேசிய அமைதிக்கும் ஒற்றுமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறினார்.

இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இது நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சவாலுக்கு உள்ளாக்கும் செயல். இத்தகைய கும்பல்களை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியவில்லையா? அல்லது இது நடைபெறுவதற்கு அவர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கும்பல் சமூக ஊடகங்கள் மற்றும் பொதுத் தளங்களில் மக்கள் ஒன்று கூடிக் கோவிலை இடிக்க தூண்டி வருவது, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233-ஐ வெளிப்படையாக மீறுவதாகவும், இதுவரை எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்தின் இந்த மௌனமும் செயலற்ற தன்மையும், அதிகாரம் வாய்ந்த யாரோ இந்த குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

சில நபர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் போல காட்சியளிப்பது கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பல இந்து கோவில்கள் காலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் மற்றும் பின்னர் ஜப்பான் நிர்வாகங்களின் அனுமதியுடன், மெர்டேகாவுக்கு முன்பே கட்டப்பட்டவை என்பதை அரசு நன்கு அறிந்திருக்கிறது என்றார்.

அந்த காலகட்டத்தில் நில ஆவணப்படுத்தும் முறைகள் இன்றையதைப்போல் இல்லாததால், நூற்றாண்டுக்கும் மேலாக வழிபாடு நடைபெற்று வரும் இடங்களை இப்போது ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தால் சட்டவிரோதம் எனக் கூறுவது வரலாற்று உண்மைகளை புறக்கணிப்பதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்து கோவில்கள் மற்றும் நில உரிமைகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைகளை தீர்ப்பது தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வழிபாட்டு இடத்தை இடிக்க மிரட்டுவது தண்டனைச் சட்டம் பிரிவு 295, 295A மற்றும் 506 ஆகியவற்றை தெளிவாக மீறும் குற்றச்செயலாகும் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் சில நபர்களுக்கு சட்டம் பொருந்தாதது போல தோன்றுவது இரட்டை தரநிலை அல்லது தெரிவு செய்யப்பட்ட சட்ட அமலாக்கம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.

சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டிய நிலையில், சில தலைவர்கள் சட்டம் மீறுபவர்களை ஊடகங்களின் மூலம் கூட்டத்தை ரத்து செய்யுமாறு வேண்டிக் கொள்வது வெட்கக்கேடானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தலைமை என்பது சட்டம் மீறுபவர்களை வேண்டிக் கொள்வது அல்ல; பயமோ பேதமோ இல்லாமல் சட்டத்தை அமல்படுத்துவதே உண்மையான தலைமை,” என்றார்.

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசியல் கண்ணாமூச்சி ஆட்டம் போதும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2007 ஆம் ஆண்டு போல மீண்டும் தெருக்களில் இறங்கி நீதியை கோர இந்திய சமூகம் விரும்பவில்லை என்றாலும், பொறுமையை பலவீனமாக கருதக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் சம்ரி வினோத், ஃபிர்தௌஸ் வோங், தமீம், சந்திரா உள்ளிட்ட அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் PPP வலியுறுத்துவதாக டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் தெரிவித்தார்.

இந்து சமூகத்தினர் சமத்துவமான சட்ட பாதுகாப்பை கோரி தெருக்களில் இறங்க வேண்டிய நிலை உருவாகும் முன்பே அதிகாரிகள் கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


கோலாலம்பூர்,மார்ச் 6-
கிள்ளான், மெரு காவல் நிலையத்தில் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்களிலும் சமூக ஊடக தளங்களிலும் பரவி வரும் சண்டை சம்பவத்தை மஇகா பணிப்படை (Briged MIC) மிகவும் கவலைக்கிடமாக எடுத்துக்கொண்டுள்ளதாக அதன் தலைவர் எண்ட்ரு டேவிட் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் சிலர் காவல் நிலைய வளாகத்துக்குள் தகராறு ஏற்படுத்தி சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்பில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தகவலின்படி, மூன்று பேர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தபோது, பின்னர் வந்த மற்றொரு குழுவினர் தகராறு ஏற்படுத்தி சண்டை தொடங்கியதாக கூறப்படுகிறது.

அந்தச் சண்டையில் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதுடன், காவல் நிலையத்தின் சில சொத்துகளும் சேதமடைந்துள்ளன.

காவல் நிலையம் போன்ற சட்ட அமலாக்க அமைப்புகளின் வளாகத்திலேயே வன்முறையில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும் என்று அவர் தெரிவித்தார். 

காவல் நிலையம் என்பது நாட்டின் சட்ட ஆட்சியின் மரியாதையையும் அதிகாரத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான இடமாகும். அதனை சவாலுக்கு உட்படுத்தும் எந்தச் செயல்பாடும் பொதுச் சமாதானத்திற்கே அச்சுறுத்தலாகும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் எந்தவித சமரசமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று MIC பிரிகேட் கோருவதாக அவர் சொன்னார்.

இத்தகைய சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், சட்டத்தை வெளிப்படையாக சவால் செய்யலாம் என்ற தவறான செய்தியை சமூகத்திற்கு அளிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், MIC பிரிகேட் தனது “குற்றத்துக்கு எதிரான தலைமுறை” (Generasi Anti Jenayah) முயற்சியின் மூலம் சட்டத்தை மதிக்கும் பண்பை சமூகத்தில் வலுப்படுத்தவும், இளைஞர்களை வன்முறை கலாச்சாரத்திலிருந்து விலக்கவும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கோலாலம்பூர்,மார்ச்3-

2027-ஆம் ஆண்டு முதல் ஆறு வயதில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அமல்படுத்தப்பட உள்ள நிலையில், ஐந்து வயது குழந்தைகளுக்குத் தரத்தை உள்ளடக்கிய கல்வி கிடைப்பதை உறுதி செய்ய நாடு முழுவதுமுள்ள 1,781 அரசின் பெர்பாடுவான் பாலர் பள்ளிகளின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. 

நாடாளுமன்றத்தில் செனட்டர் டத்தோ டாக்டர் ஹாஜி முஸ்தபா மூசா எழுப்பிய கேள்விக்குத் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர், யுனேஸ்வரன் ராமராஜ் இவ்வாறு பதிலளித்தார்.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு துறை (JPNIN) மூலம் இந்தப் பாலர் பள்ளிகளின் திறனைக் கட்டம் கட்டமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும், தேவைகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பாலர் பள்ளியின் வகை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாணவர் சேர்க்கை திறன் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். 

கிடைக்கக் கூடிய இடங்களை முழுமையாகப் பயன்படுத்தி, உள்ளூர் தேவைக்கேற்ப மாணவர் சேர்க்கை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.

மேலும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்னணி, வளர்ச்சி நிலை மற்றும் கல்வி தேவைகள் உள்ளிட்ட முழுமையான சுயவிவரங்கள் உருவாக்கப்பட்டு, கல்வி அணுகுமுறை மேலும் உள்ளடக்கியதாகவும் சமூக தேவைகளுக்கு ஏற்பவும் வடிவமைக்கப்படுவதை அவர் உறுதிப்படுத்தினார். 

நீண்ட காலமாக, 2021–2030 கல்வி திட்டத்தின் கீழ் இந்தப் பாலர் பள்ளிகள் வலுப்படுத்தப்பட்டு, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நாட்டுப்பற்று மதிப்புகளை மேம்படுத்தும் முக்கிய கல்வி அமைப்பாகச் செயல்படுகின்றன என்பதையும் யுனேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.


கோலாலம்பூர், மார்ச் 3-
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள மலேசியர்களை பாதுகாப்புடன் மீட்க வெளிவிவகார அமைச்சகம் உடனடி மற்றும் தீர்மானமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் முற்போக்கு   கட்சியின் (பிபிபி) தேசிய இளைஞர் தலைவர் சத்தியா சுதாகரன்  வலியுறுத்தியுள்ளார்.
போர் நிகழும் பகுதியில் தங்கியுள்ள மலேசிய மாணவர்கள், தொழிலாளர்கள், யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு, நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பற்றிய  கவலைகளை எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச அவசரநிலைகளில், வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களை பாதுகாப்பது அரசின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

சர்வதேச அமைப்புகள் மற்றும் அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து அவசர வெளியேற்ற மற்றும் மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட செயற்பாட்டு குழுவையும், 24 மணி நேர உதவி அழைப்புக்கான ஹாட்லைனையும் அமைக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள மலேசிய தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் வழியாக தொடர்ச்சியான மற்றும் தெளிவான தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசின் தெளிவான தகவல் மற்றும் அவசர நடவடிக்கை, அவர்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியர்களின் பாதுகாப்பும் நலனும் அரசியல் எல்லைகளை மீறிய ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், மனிதாபிமான ஒருங்கிணைப்பு முயற்சிகளில் பிபிபி இளைஞர் பிரிவு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

பாகான் டத்தோ, பிப்.27-

என் அரசியல்  மற்றும்  பொது வாழ்க்கையில் நான் எப்போதும் மக்களிடத்தில் பாகுபாடு பார்த்ததே இல்லை என டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட்  ஹமிடி  மனம் திறந்து பேசினார்.

இன்று தனது பாகான் டத்தோ  நாடாளுமன்ற தொகுதியில் 1,000 இந்திய  மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கிய  டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் இது என் கடமை என்றார்.

அதோடு என் பொது வாழ்க்கையில் நான் கடை பிடிக்கும் ஒரே விஷயம்  நான் இன மத பாகுபாடு பார்க்கமாட்டேன்.

என்னை பொறுத்தவரை, எனக்கு எல்லாரும் சமம். எல்லோருடைய உரிமையும் பாதுகாக்கப்பட  வேண்டும். அதோடு எல்லாருக்கும் அடிப்படை வசதி, தேவையான  உதவி கிடைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இந்திய சமுதாயத்தின் மீது எனக்கு  தனி அன்பும் மரியாதையும் உண்டு. அவர்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்றார் அவர்.