loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், பிப் 26-

2025-ஆம் ஆண்டு தென்கிழக்காசிய (SEA Games) விளையாட்டு போட்டியில் மலேசிய கபடி அணி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்தச் சாதனையைத் தொடர்ந்து, மலேசிய கபடி சங்கத் தலைவர் பீட்டர், தேசிய கபடி அணியின் நிர்வாகி, கபடி வீரர்கள், பயிற்றுனர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களைத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். கபடி வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில் துணையமைச்சர் நற்சான்றிதழ்கள், நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

கபடி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும். அதனைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் நமது ஒவ்வொருவரின் கடமையாகும். இதற்காக கபடி விளையாட்டாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்றார் துணையமைச்சர்.

தற்போது பல இனங்கள், மொழிகள் மற்றும் கலாச்சார பின்னணியைக் கொண்ட இளைஞர்களை ஒரே மேடையில் இணைக்கும் திறன் கபடி விளையாட்டிற்கு இருப்பதாகவும், இது பரஸ்பர புரிதல், ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்றை வளர்க்கும் வலுவான கருவியாகச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் கபடியைத் தொழில்முறை ரீதியில் மேம்படுத்த சிறப்பு வசதியுடன் கூடிய கபடி அரங்கம் அமைக்க வேண்டும் என்ற மலேசிய கபடி சங்கத்தின் கோரிக்கையைக் குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்கத் தாம் தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார்.

மேலும், கபடி விளையாட்டை இந்திய சமூகத்தைத் தாண்டி அனைத்து இனங்களிடமும் கொண்டு சேர்க்க சமூக ஊடகங்களை வலுவாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அரசு தொடர்புடைய நிறுவனங்கள் (GLC) மற்றும் பொதுமக்கள் வழியாக நிதி ஆதரவைப் பெறும் முயற்சிகளை கபடி சங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, மலேசிய கபடி சங்கத் தலைவர் பீட்டர், தங்களின் சாதனைகளுக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், கபடி வீரர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு அவர்களுக்குப் பெரும் ஊக்கமாக இருப்பதுடன், இது அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

கபடி தற்போது சீ, ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் நிலைகளில் இடம்பெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளிலும் கபடி இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர்,பிப்.26-

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தினர்களுக்கான வட்டார பொதுக்கூட்டம் மாநில வாரியாக நடைபெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பாக அறிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில வட்டார பொதுக்கூட்டம் ஜாலான் மெங்கிபோல், குளுவாங், ஜோகூர் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தியர் சங்க மண்டபத்தில் 28.2.2026ம் தேதி சனிக்கிழமை 4.30 மணி அளவிலும்
மலாக்கா மாநில வட்டார பொதுக்கூட்டம் 1.3.2026ம் தேதி ஞாயிற்றுக்கிழமை KM-23, ஜாலான் பத்து 14, பெம்பான் மலாக்கா எனும் முகவரியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைப்பெறவுள்ளது.

பகாங்-கிளந்தான்-திரெங்கானு ஆகிய மாநிலங்களின் வட்டார பொதுக்கூட்டம் மார்ச் மாதம் 5ஆம் தேதி மாலை 4.30 மணிக்கும், கேமரன் மலை - கம்போங் ராஜா, புளுவேலி எனும் முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் நடைப்பெறும்.

பேரா வட்டார பொதுக்கூட்டம் 6.3.2026 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு லோட் எண்: ஜாலான் 4890 N, ஜாலான் கொம்ளக்ஸ் சுக்கான், ஈப்போ, பேராக் எனும் முகவரியில் அமைந்துள்ள (ஸ்டேடியம் பேரா அருகில்) மண்டபத்தில் நடைபெறும்.


தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் துணை சட்டவிதிகளின் பிரிவு 15ன் கீழ், 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் நாள் அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அங்கத்தினர்கள் மட்டுமே இந்த வட்டார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்பதும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகுதிகளை பெற்றுள்ள அங்கத்தினர்கள் தவறாமல் குறிப்பிட்ட தேதிகளில் வட்டார பொதுக்கூட்டத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் செயலாளரும் - நிர்வாக இயக்குநரும் டத்தோ பா. சகாதேவன் இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறார்.

(குறிப்பு: அங்கத்தினர்கள் மறக்காமல் தங்களது அடையாள அட்டையை உடன் கொண்டு வரவும்)

கோலாலம்பூர், பிப்.25-

நடந்து முடிந்த மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து குவாந்தான் உயர் நீதிமன்றத்தில் தற்போது சுமுகமான முடிவு கிடைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் அனைத்து பதவிகளுக்கும் போட்டிகளை நடுத்தும் வகையில் அந்த முடிவு கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னர் தலைவர் பதவியை தவிர்த்து அனைத்து பதவிகளுக்கும் போட்டி நடத்த முடிவு கிடைத்தது. அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. தற்போது வழக்கு முடிவில் அனைத்து பதவிகளுக்கும் போட்டி நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் தேர்தலில் போட்டியிடும் இரு தரப்புகளும் தற்போது தலையிட முடியாது. மாறாக இந்த தேர்தலை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியப்படுகிறது.

கடந்த 23ஆம் தேதி ஜூன் மாதம் 2024ஆம் ஆண்டு  ஆலயத்தின் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால்  நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது.

தற்போது அதற்கு   நல்ல முடிவு கிடைத்துள்ளதாக நம்புவோம்.

குவாந்தான் முகாமில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழந்த 22 வயது ராணுவ வீரர் ட்ரூப்பர் கே. இந்திரன் மரணம் தொடர்பாக இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஇகா பினாங்கு மாநில தலைவர் ஜே. தினகரன், ஆரம்ப அறிக்கையில் வெளிப்புற காயங்கள் இல்லை என கூறப்பட்டாலும், உட்புற காயங்கள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

குடும்பத்தினரின் சந்தேகத்தை முன்னிட்டு, உண்மையான மரண காரணம் தெரிய இரண்டாவது  பிரேத பரிசோதனை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், பிப்.19-
மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து மஇகா பணிப்படை (Briged MIC) கடும் கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை புகாரளிக்கப்பட்டுள்ளதையும், அதற்கு உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் மஇகா பணிப்படையின் தலைவர் ஆண்ட்ரு டேவிட் சுட்டிக்காட்டினார்.

பல இன, பல மத மக்கள் இணைந்து வாழும் நம் நாட்டில், மதத்தை எந்த வடிவிலும் அதுவும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவமதிப்பது நாட்டின் நீண்டகால ஒற்றுமைக்கு களங்கம் விளைவிப்பதாக அவர் தெரிவித்தார்.

"குற்றமற்ற தலைமுறை” (Generasi Anti Jenayah) என்ற கொள்கையை முன்வைக்கும் இயக்கமாக, 3R (மதம், இனம், அரசியல் அமைப்பு) தொடர்பான விடயங்களில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது மிகுந்த பொறுப்பற்ற செயல் என்றும், இது இனங்களுக்கிடையேயான பதற்றத்தை தூண்டி, நாட்டின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடியது என்றும் அவர் எச்சரித்தார்.

தொழில்நுட்பம் மக்களை ஒன்றிணைக்கும் கருவியாக இருக்க வேண்டும்; வெறுப்பை விதைக்கும் ஆயுதமாக அல்ல. மலேசிய குடிமக்களாக இருந்தாலும், வெளிநாட்டு பயணிகளாக இருந்தாலும், அனைவரும் நாட்டின் மத மற்றும் கலாசார உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவர்  வலியுறுத்தினார்.

இன, மத அடிப்படையிலான தூண்டுதல்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஒழுக்கப்பொறுப்பற்ற செயல் என்றும், எதிர்கால தலைமுறையின் நலனுக்காக பரஸ்பர மரியாதையை காக்க வேண்டும்.

நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அரசு தரப்பு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆண்ட்ரு டேவிட் கோரிக்கை விடுத்தார்.