loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கூலாய் ஜெயா, ஜூலை 2-

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட என் மகன் அருண்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தாயார் தேவி உருக்கத்துடன் தெரிவித்தார்.

21 வயதான அருண்குமார் ஒரு அமைதியான இளைஞர். எப்போதும் தன் குடும்பத்திற்குத்தான் முதலிடம் கொடுப்பார், அவரது மரணம்  அவரின் உயிரைப் பறித்தது மட்டுமல்லாமல், எங்கள் அனைவரின் கனவுகளையும் ஒன்றாகச் சிதைத்துவிட்டது.

கடந்த மே 21ஆம் தேதி பெக்கான் நெனாஸில் உள்ள உணவகத்தின் முன்பு நடந்த திட்டமிடப்பட்டதாக நம்பப்படும் ஒரு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத 52 வயதான கே. தேவி, தனது மகனின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு உறவினர்கள் எங்களுக்குத் தெரிவித்தபோதுதான் இந்தச் சம்பவம் பற்றித் தெரியவந்தது.

சம்பவத்திற்கு முன்பு, அவனிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. மாறாக, அவர் வழக்கம் போல் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்,

நாங்கள் வங்கிக்குச் சென்றுவிட்டு,  வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது என்று அவர் கூறினார்.

அருண்குமார் கொலை வழக்கில் ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், இன்னும் சிலர் பிடிபடாமல் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

அவர்களையும் கைது செய்து நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என போலிசாரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

அவர்கள் சுதந்திரமாக இருக்கும் வரை, எங்கள் வாழ்க்கை அமைதியாக இருக்காது என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர், ஜூலை 2 –
டிரெய்னோகேட் மலேசியா (Trainocate Malaysia) மற்றும் சிலாங்கூர் யூத் கம்யூனிட்டி (SAY) இணைந்து ஏற்பாடு செய்த Trainocate AI Training என்ற சமூக அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சித் திட்டம், கடந்த ஜூன் 6 முதல் கோலாலம்பூரில் உள்ள KL Eco City-யில் நடைபெற்றது.
எதிர்கால டிஜிட்டல் திறன்களையும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான அடிப்படை அறிவையும் இளைஞர்களுக்கு வழங்கும் நோக்கில் நடைபெற்ற இப்பயிற்சியில், மொத்தம் 120 பேர் பங்கேற்றனர். அவர்களில் மலேசியா ஸ்ரீ சாரதா தேவி இல்ல நலச்சங்கத்தைச் சேர்ந்த 28 மாணவர்களும் இடம்பெற்றனர்.
இந்த 28 மாணவர்களும் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது, அவர்களின் கற்றலுக்கான அர்ப்பணிப்பையும், முன்னேற்றத்திற்கான உறுதியையும் வெளிப்படுத்துகிறது. தரமான கல்வி, திறன் மேம்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியின் மூலம் பின்தங்கிய குழந்தைகளின் எதிர்காலத்தை வளப்படுத்தி வரும் ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தின் பணியில் இது மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களை கௌரவிக்கும் வகையில், Trainocate Career Jumpstart 30th Celebration & Graduation Hi-Tea நிகழ்ச்சி கடந்த ஜூன் 27ஆம் தேதி சன்வே ரிசார்ட் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில இளவரசர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், Trainocate Group Holdings (Japan), Trainocate Malaysia மற்றும் Selangor Youth Community (SAY) ஆகிய அமைப்புகளின் நிர்வாகக் குழுவினரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தைச் சேர்ந்த 28 மாணவர்களும் தங்களது பயிற்சி நிறைவு சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். மேலும், இல்லத்தைச் சேர்ந்த சுசிதாரா ஜெகன் இந்நிகழ்ச்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக (Emcee) சிறப்பாகப் பொறுப்பேற்று நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
அதேவேளை, சாருமதி சண்முகம், டிரெய்னோகேட் AI பயிற்சித் திட்டத்தில் பெற்ற அனுபவங்களையும், தனது கற்றல் பயணத்தையும் சிலாங்கூர் மாநில இளவரசர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பகிர்ந்து உரையாற்றினார்.
இருவரின் தன்னம்பிக்கை, பேச்சுத்திறன் மற்றும் தொழில்முறை அணுகுமுறை ஆகியவை, ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தில் வழங்கப்படும் ஒழுக்கம், கல்வி மற்றும் ஆளுமை வளர்ப்பின் சிறந்த வெளிப்பாடாக அமைந்தன.
இந்நிகழ்வில் பங்கேற்று பட்டதாரி மாணவர்களை ஊக்குவித்த சிலாங்கூர் மாநில இளவரசருக்கு ஸ்ரீ சாரதா தேவி இல்ல நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.
அதேபோல், இளைஞர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் திறன் பயிற்சிகளை வழங்கிய Trainocate Malaysia, Trainocate Group Holdings (Japan) மற்றும் Selangor Youth Community (SAY) ஆகிய அமைப்புகளுக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்காக ஸ்ரீ சாரதா தேவி இல்ல நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள உஞ்சனை கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான, வரலாற்று மற்றும் ஆன்மிகச் சிறப்புமிக்க திருவோண சக்கரவர்த்தியார் ஆலயம் தற்போது பராமரிப்பின்றி புதர்கள், செடி, கொடிகள் மண்டிக் கிடக்கும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலயத்தை சீரமைக்க வேண்டும் என, கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆலயம் சக்தி வாய்ந்ததும், வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆகும். இங்கிருந்து பசும்பால் அக்காலத்தில் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆலயத்தின் முன்புறத்தில் குளமும், பின்புறத்தில் மயானமும் அமைந்துள்ளன. மேலும், ஆலயத்தைச் சுற்றி முருகப்பெருமான் உள்ளிட்ட பல தெய்வங்களின் சிலைகள் உள்ளன. அவை அனைத்தும் தற்போது காடு மண்டி மறைந்துள்ளதால், உடனடியாக சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உஞ்சனை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருவதால், இந்த ஆலயம் சீரமைக்கப்பட்டால் பக்தர்களுக்கும், கிராம மக்களுக்கும் பெரும் பயனளிக்கும். கண்டதேவி ஆலயத்தைப் போல, உஞ்சனை திருவோண சக்கரவர்த்தியார் ஆலயமும் புகழ்பெற்ற திருத்தலமாக வளர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, தமிழக முதலமைச்சர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஆலயத்தை முழுமையாக சீரமைத்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உஞ்சனை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முருகன்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள உஞ்சனை கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான, வரலாற்று மற்றும் ஆன்மிகச் சிறப்புமிக்க திருவோண சக்கரவர்த்தியார் ஆலயம் தற்போது பராமரிப்பின்றி புதர்கள், செடி, கொடிகள் மண்டிக் கிடக்கும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலயத்தை சீரமைக்க வேண்டும் என, கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆலயம் சக்தி வாய்ந்ததும், வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆகும். இங்கிருந்து பசும்பால் அக்காலத்தில் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆலயத்தின் முன்புறத்தில் குளமும், பின்புறத்தில் மயானமும் அமைந்துள்ளன. மேலும், ஆலயத்தைச் சுற்றி முருகப்பெருமான் உள்ளிட்ட பல தெய்வங்களின் சிலைகள் உள்ளன. அவை அனைத்தும் தற்போது காடு மண்டி மறைந்துள்ளதால், உடனடியாக சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உஞ்சனை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருவதால், இந்த ஆலயம் சீரமைக்கப்பட்டால் பக்தர்களுக்கும், கிராம மக்களுக்கும் பெரும் பயனளிக்கும். கண்டதேவி ஆலயத்தைப் போல, உஞ்சனை திருவோண சக்கரவர்த்தியார் ஆலயமும் புகழ்பெற்ற திருத்தலமாக வளர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, தமிழக முதலமைச்சர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஆலயத்தை முழுமையாக சீரமைத்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உஞ்சனை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முருகன்

கோலாலம்பூர்,ஜூலை 2-
மலேசிய தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (National Chamber of Commerce and Industry of Malaysia – NCCIM) ஏற்பாடு செய்த 6ஆவது தேசிய பொருளாதார மாநாடு இன்று சிறப்பாக நடைபெற்றது.

நாட்டின் ஐந்து முக்கிய வர்த்தக சம்மேளனங்கள் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

மாநாட்டை பொருளாதார துணை அமைச்சர் லியு சின் தோங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இதில் தொழில்துறையினர், வர்த்தகர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உரையாற்றுகையில், தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தில் தற்போது 630-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதாகவும், அவர்களில் சுமார் 150 பேர் இந்திய தொழில்முனைவோர்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த தேசிய பொருளாதார மாநாடு ஆறாவது முறையாக நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, உலகளாவிய பொருளாதாரச் சவால்கள், போர் காரணமாக ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மாநாட்டில் விரிவாக ஆய்வு செய்யப்படுவதாகக் கூறினார்.

மாநாட்டில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில், நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையிலான பரிந்துரைகள் மற்றும் செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தேசிய வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே இந்த தேசிய பொருளாதார மாநாடு நடத்தப்படுவது வழக்கமாக இருப்பதாகவும், மாநாட்டில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளில் பலவற்றை அரசு இதுவரை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருவதாகவும் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசு இந்த மாநாட்டுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதற்கான சான்றாகவே பொருளாதார துணை அமைச்சர் நேரில் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடக்கி வைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டை மையமாகக் கொண்ட தனித்துவமான பொருளாதார மாநாட்டை இந்த ஆண்டுக்குள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ டாக்டர் ஏ.டி.குமரராஜா தெரிவித்தார்.

இந்த மாநாட்டை மைக்கி (MAICCI) உள்ளிட்ட இந்திய வர்த்தக மற்றும் பொதுநல அமைப்புகளுடன் இணைந்து நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் மூலம் அரசுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயனுள்ள கொள்கைப் பரிந்துரைகளை வழங்குவதே முக்கிய நோக்கமாகும் என அவர் வலியுறுத்தினார்.