loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், ஜூன் 26 –
25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள மலேசிய வீரர்கள் முழு பலத்துடன் போட்டியிட்டு, அனைத்துலக அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் சாதனை படைக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி வலியுறுத்தினார்.

25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், இப்போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 350 அனைத்துலக வீரர்கள் கலந்து கொண்டிருப்பது போட்டியின் உயரிய தரத்தையும் சிறப்பையும் வெளிப்படுத்துவதாகக் கூறினார்.

மேலும், போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வீரர்களையும் அவர் வரவேற்று, விளையாட்டு மூலம் நாடுகளுக்கிடையிலான நட்புறவும் ஒற்றுமையும் மேலும் வலுப்பெற வாழ்த்துத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, 25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

கோலாலம்பூர்,ஜூன் 26-
தலைநகரிலுள்ள தித்திவாங்சா மண்டபத்தில் 25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் தொடக்க விழா இன்று நடைப்பெற்ற வேளையில் அதனை துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 1,850 கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 350 சர்வதேச வீரர்களும், 1,500 உள்ளூர் வீரர்களும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பல்வேறு வயது மற்றும் திறன் பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டி, சர்வதேச நட்புறவை வலுப்படுத்துவதோடு, கராத்தே விளையாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கியது.

புத்ராஜெயா கராத்தே சங்கத் தலைவர் தியாகு பொன்னையா  தலைமை உரையாற்றியபோது இத்தகவலை வழங்கினார்.

கோலாலம்பூர், ஜூன் 25-
இயற்கையுடன் கலந்த இசை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நியோன் நிலவு 2.0’ இசை நிகழ்ச்சி, வரும் சனிக்கிழமை (27ஆம் தேதி) மோரிப் கடற்கரையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியின் முதல் பதிப்பான நியோன் நிலவு அருவி ஓரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், இம்முறை கடற்கரைச் சூழலில் இசை ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மாலை 2 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிகளுடன், புதையல் தேடும் போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் லாபம் முழுமையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையின் சிகிச்சைக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பிரபல பாடகர்களான வேல்முருகன் மற்றும் அருள் பிரகாசம் ஆகியோர் தங்களது கலைப் படைப்புகளை வழங்கவுள்ளனர். அதேவேளையில் உள்ளூர் கலைஞர்களான சந்தேஷ், குமரேஷ் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளனர்.

நியோன் நிலவு 2.0 இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டு நிறுவனமான ஜெனிராவின் இயக்குநர் ரூபன், மேற்கண்ட தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செந்தூலிலுள்ள ரூட்ஸ் 88 ஸ்போர்ட் பாரில் இந்த நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த பார் இந்த நிகழ்ச்சியின் ஆதரவாளர்களில் ஒன்றாகும்.

இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஆதரவாளர்களான எசான் குரூப், புளு பிரதர்ஸ் என அனைத்து நிறுவனங்களுக்கும் ஜெனிரா நிறுவனத்தின் சார்பில் ரூபன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர், ஜூன் 25-
ஜொகூர் மாநிலத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் தலைமைத்துவ முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் டிரா மலேசியா 10 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

கடந்த சில தசாப்தங்களில் தோட்டப்புறங்களில் வாழ்ந்த பெரும்பாலான இந்தியர்கள் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததன் மூலம் கல்வி, தொழில்நுட்பம், வணிகம், தொழில்முனைவு, பொது சேவை மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனையாளர்கள் உருவாகியுள்ளதாக டிரா மலேசியா தெரிவித்துள்ளது.

எனினும், சமூகத்தின் ஒரு பகுதியினர் இன்னும் நகர்ப்புற வறுமை, கல்வி இடைநிறுத்தம், வேலைவாய்ப்பின்மை, குடியுரிமை மற்றும் அடையாள ஆவணப் பிரச்சினைகள், போதைப்பழக்கம், சமூகச் சீர்கேடுகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொண்டு வருவதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, ஜொகூரில் 4 மக்கள் சேவை மையங்களை உருவாக்குதல், தொழில்முனைவோர் மற்றும் வணிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரித்தல், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்திறன் பயிற்சிகளை விரிவுபடுத்துதல், மலிவு விலை வீட்டு வசதி மற்றும் வீட்டுரிமைத் திட்டங்களை மேம்படுத்துதல் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அனைவருக்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்துவதோடு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்துதல், குடியுரிமை மற்றும் அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வு காணுதல், அரசாங்கக் குழுக்கள், அரசாங்க இணை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குதல், இளைஞர்கள், பெண்கள் மற்றும் குடும்பங்களின் நலனை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துதல், மாநில அளவில் சமூக மேம்பாட்டு குழுவொன்றை அமைத்து அனைத்து முன்னெடுப்புகளையும் ஒருங்கிணைத்து கண்காணித்தல் ஆகிய பரிந்துரைகளையும் டிரா மலேசியா வலியுறுத்தியுள்ளது.

இந்த பரிந்துரைகள் வெறும் வாக்குறுதிகளாக அல்லாமல், நடைமுறைப்படுத்தக்கூடிய சமூக மேம்பாட்டுத் திட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளதாக டிரா மலேசியா தெரிவித்துள்ளது.

அதேவேளை, இத்திட்டங்கள் வெற்றிபெற மக்களின் பங்களிப்பும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள டிரா மலேசியாவின் தலைவர் டத்தோ சரவணன், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்களது வாக்குரிமையின் சக்தியைப் பயன்படுத்தி சமூக தேவைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோலாலம்பூர், ஜூன் 25-
சமூக வலைத்தளங்களில் மஇகா குறித்து பரப்பப்படும் அவதூறுகளையும் பொய்யான தகவல்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று மஇகாவின் தேசிய  உதவித் தலைவர் டத்தோ முருகையா கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, ஜொகூரில் உள்ள மஇகா கட்டடம் விற்கப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் தெரிவித்தார்.

“மஇகாவைப் பற்றிய தவறான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை எட்டு பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மஇகாவின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் எட்டு முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, கூட்டுப் பிரார்த்தனை, குடும்ப தின விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

அடுத்ததாக, சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் வரும் ஜூன் 28ஆம் தேதி காலை முதல் மாலை வரை 152 தொகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன என்றார்.

இந்த மருத்துவ முகாம்களில் அனைத்து இன மக்களும் பங்கேற்று பயனடையலாம் என்றும், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், ஜூலை 4ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சுப் போட்டி, இரு மாநிலங்களின் இடைத்தேர்தல் காரணமாக ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மஇகா தொகுதிகளிலும் நெடுஓட்ட நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு எஸ்.எம். முத்து தலைமை தாங்குவார் என்றும் கூறினார்.

வரவிருக்கும் ஜொகூர் மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு, 56 பகுதிகளில் மஇகா பிரதிநிதிகள் களமிறங்கி தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“ஜொகூர் மாநிலம் தேசிய முன்னணியின் முக்கியமான கோட்டையாகும். இம்முறையும் இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். தேசிய முன்னணி 50 இடங்களை வெல்லும் இலக்குடன் களமிறங்கியுள்ளது,” என்றும் டத்தோ முருகையா கூறினார்.