loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிரம்பான், ஜூலை 22 –
பாஸ் மற்றும் தேசிய முன்னணி இடையே தற்போது உருவாகியுள்ள புதிய அரசியல் கூட்டணியை மட்டும் வைத்து அல்லாமல், அவற்றின் நிர்வாகப் பதிவு, அரசியல் கொள்கைகள் மற்றும் கூட்டணியின் அடிப்படை நோக்கங்களை ஆராய்ந்து நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று சிலாங்கூர் கெஅடிலான் தேர்தல் பிரிவு இயக்குநர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் பாஸ் மற்றும் தேசிய முன்னணி இணைந்து செயல்பட்ட காலகட்டத்தை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அக்காலத்தில் அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

"அரசியல் கூட்டணி என்பது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஏற்பாடு மட்டுமல்ல. அது நாட்டின் எதிர்கால திசை, நிர்வாகத்தின் நிலைத்தன்மை மற்றும் கூட்டணியின் கொள்கைகள் மீது மக்களுக்கு ஏற்படும் நம்பிக்கையையும் தீர்மானிக்கிறது. இந்தக் கூட்டணி உண்மையில் மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதா அல்லது அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கத்திற்காக மட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது," என்றார்.

உலு சிலாங்கூர் கெஅடிலான் கிளைத் தலைவருமான அவர், முன்பு வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த கட்சிகள் தற்போது ஒன்றிணைந்திருப்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானது என்றார்.

"முன்னர் பெரும் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகள் இன்று அதிகாரத்திற்காக இணைகின்றன என்றால், அவர்களின் கொள்கைகள் மாறிவிட்டதா அல்லது அரசியல் தேவைக்கேற்ப மாற்றப்பட்டதா என்பதை மக்கள் அறிய உரிமையுடையவர்கள். இந்த மாற்றத்தின் அடிப்படை என்ன என்பதையும், மக்களின் நலனே முன்னுரிமை பெறும் என்பதற்கான உத்தரவாதம் என்ன என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

முதிர்ச்சியான அரசியல் என்பது கூட்டணி அமைப்பதைத் தடுக்காது என்றாலும், அது தெளிவான கொள்கை, மக்களிடம் நேர்மை மற்றும் நல்லாட்சிக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் டாக்டர் சத்திய பிரகாஷ் வலியுறுத்தினார்.

"அதிகாரம் கிடைக்கும் போது கொள்கைகளை கைவிடக் கூடாது; அரசியல் லாபத்திற்காக மட்டுமே கொள்கைகளை பயன்படுத்தவும் கூடாது. ஏனெனில், அரசியல்வாதிகளின் வார்த்தைகளை மக்கள் மறந்தாலும், அவர்களின் செயல்பாடுகளையும் ஆட்சிப் பதிவையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்," என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர், ஜூலை 21 – மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 137 தொகுதிகளில் ஒரே நேரத்தில் மாபெரும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படவுள்ளதாக மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா தெரிவித்தார்.

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மொத்தம் ஏழு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றில் கூட்டு பிரார்த்தனை, குடும்ப விழா, விளையாட்டுப் போட்டி மற்றும் மருத்துவ முகாம் ஆகிய நான்கு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

அடுத்த நிகழ்வாக, வரும் 26ஆம் தேதி காலை 7.00 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 137 மஇகா தொகுதிகளிலும் ஓட்டப்பந்தயம் ஒரே நேரத்தில் நடைபெறும். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 1,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தேசிய அளவிலான தொடக்க நிகழ்ச்சி கோலாலம்பூர் தாமான் தித்திவங்சாவில் நடைபெறவுள்ளது. இதில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்து தொடக்கி வைப்பார்.

மக்களிடையே உடல்நல விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த ஓட்டப்பந்தயம் நடத்தப்படுவதாக டத்தோ முருகையா தெரிவித்தார். குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் உடற்பயிற்சியில் போதிய ஈடுபாடு காட்டுவதில்லை என்பதால், அவர்களை உடற்பயிற்சியில் ஈடுபடுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி அமையும் என்றார்.

இந்த தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தின் ஒருங்கிணைப்பாளராக டத்தோ எஸ்.எம். முத்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிரம்பான் ஜெயா, ஜூலை 20 – சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக எண் 1-இல் போட்டியிடும் ஆர். தினாளன், இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது தேர்தல் பிரச்சார அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் இடம்பெறும் என்றும், சிரம்பான் ஜெயா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான வாக்குறுதிகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தாம் அரசியலுக்கு புதிதானவர் அல்ல என்றும், தனது தந்தை ராஜகோபாலின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நீண்ட காலமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தினாளன் குறிப்பிட்டார்.

சிரம்பான் ஜெயா மக்களை சந்தித்தபோது, விளையாட்டுத் திடல்கள் இல்லாதது, தெருவிளக்குகள் போதுமான அளவில் இல்லாதது, கல்வி வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியது உள்ளிட்ட பல்வேறு குறைகளை மக்கள் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, மேற்கல்வி தொடர விரும்பும் இளைஞர்களுக்கு அதிகமான கல்வி வாய்ப்புகளையும் தேவையான ஆதரவுகளையும் ஏற்படுத்துவதற்கு தேசிய முன்னணியுடன் இணைந்து மஇகா பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வரவிருக்கும் தேர்தலில் சிரம்பான் ஜெயாவில் நீல அலை எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறிய ஆர். தினாளன், தொகுதி மக்களிடம் தேசிய முன்னணிக்கு ஆதரவு அளித்து எண் 1-க்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

புரோட்டோன் வாகன விற்பனை நிலையம் இன்று ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை பகல்வேளையில் புதிதாக தொடக்கம் கண்டது.

புரோத்தோன் குடும்பத்தின் அனைத்து ரக வாகனங்களும் விற்பனை செய்யப்படும் ஓரிட விற்பனை மையமாக Cahaya Automotif Sdn Bhd வடிவமைக்கப்பட்டு இன்று இந்நிறுவனத்தின் தொடக்க விழா நடத்தப்பட்டது.

கோத்தா டாமண்சாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமட் இஸுவான் பின் அகமட் காசிம், புரோத்தோன் பொதுத் தொடர்பு இயக்குனர் திருமதி சுலாவாத்தி முகமட் யூசுஃப் உள்ளிட்டோர் இந்த வாகன விற்பனை மைய தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, 47810 கோத்தா டாமன் சாரா, 27 Jalan PJU   5/20E THE STRAND என்னும் இடத்தில் இந்த புரோத்தோன் குழும விற்பனை நிலையம் அமைந்துள்ளது.

சிரம்பான், ஜூலை 20 –
"Ini Kali Lah" என்ற தேர்தல் முழக்கம் தற்போது தேசிய முன்னணி (பிஎன்) பக்கம் திரும்பியுள்ளதாகவும், மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ அசோஜன் தெரிவித்தார்.

சிரம்பான் ஜெயா தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ தினாளன் ராஜகோபாலுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அவர், நெகிரி மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், அவற்றில் 25 தொகுதிகளில் தேசிய முன்னணி களமிறங்கியுள்ளதாக கூறினார். இதில் இரண்டு தொகுதிகளில் மஇகா வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்றார்.

நான்கு தவணைகளாக ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) வசம் இருந்து வந்த சிரம்பான் ஜெயா தொகுதியில், இம்முறை மஇகா வேட்பாளர் டத்தோ தினாளன் ராஜகோபால் போட்டியிடுவது மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தொகுதியில் சுமார் 27 விழுக்காடு இந்திய வாக்காளர்களும், 45 விழுக்காடு சீன வாக்காளர்களும் உள்ளனர். வேட்பாளர் தினாளன் ராஜகோபால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்னோ மற்றும் மசீச கட்சியினரும் இணைந்து களப்பணியை முன்னெடுத்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலையிலேயே இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், குறிப்பாக சீன வாக்காளர்களிடமிருந்தும் மீண்டும் தேசிய முன்னணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதை உணர முடிகிறது என்றும் டத்தோ அசோஜன் கூறினார்.

சிரம்பான் ஜெயா தொகுதியில் கடுமையான போட்டி நிலவினாலும், மக்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு தேசிய முன்னணிக்கு புதிய நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.