loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

குவாந்தான் முகாமில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழந்த 22 வயது ராணுவ வீரர் ட்ரூப்பர் கே. இந்திரன் மரணம் தொடர்பாக இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஇகா பினாங்கு மாநில தலைவர் ஜே. தினகரன், ஆரம்ப அறிக்கையில் வெளிப்புற காயங்கள் இல்லை என கூறப்பட்டாலும், உட்புற காயங்கள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

குடும்பத்தினரின் சந்தேகத்தை முன்னிட்டு, உண்மையான மரண காரணம் தெரிய இரண்டாவது  பிரேத பரிசோதனை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், பிப்.19-
மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து மஇகா பணிப்படை (Briged MIC) கடும் கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை புகாரளிக்கப்பட்டுள்ளதையும், அதற்கு உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் மஇகா பணிப்படையின் தலைவர் ஆண்ட்ரு டேவிட் சுட்டிக்காட்டினார்.

பல இன, பல மத மக்கள் இணைந்து வாழும் நம் நாட்டில், மதத்தை எந்த வடிவிலும் அதுவும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவமதிப்பது நாட்டின் நீண்டகால ஒற்றுமைக்கு களங்கம் விளைவிப்பதாக அவர் தெரிவித்தார்.

"குற்றமற்ற தலைமுறை” (Generasi Anti Jenayah) என்ற கொள்கையை முன்வைக்கும் இயக்கமாக, 3R (மதம், இனம், அரசியல் அமைப்பு) தொடர்பான விடயங்களில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது மிகுந்த பொறுப்பற்ற செயல் என்றும், இது இனங்களுக்கிடையேயான பதற்றத்தை தூண்டி, நாட்டின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடியது என்றும் அவர் எச்சரித்தார்.

தொழில்நுட்பம் மக்களை ஒன்றிணைக்கும் கருவியாக இருக்க வேண்டும்; வெறுப்பை விதைக்கும் ஆயுதமாக அல்ல. மலேசிய குடிமக்களாக இருந்தாலும், வெளிநாட்டு பயணிகளாக இருந்தாலும், அனைவரும் நாட்டின் மத மற்றும் கலாசார உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவர்  வலியுறுத்தினார்.

இன, மத அடிப்படையிலான தூண்டுதல்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஒழுக்கப்பொறுப்பற்ற செயல் என்றும், எதிர்கால தலைமுறையின் நலனுக்காக பரஸ்பர மரியாதையை காக்க வேண்டும்.

நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அரசு தரப்பு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆண்ட்ரு டேவிட் கோரிக்கை விடுத்தார்.

ஜோகூர்,பிப் 19-
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல சிக்கல்கள், கஷ்டங்கள் , சவால்கள் வந்து போகும், அந்த அனைத்து இன்னல்களையும்  கடந்து மன நிம்மதியை தேடும் பயணத்தில் பலர் இருப்பார்கள். அந்த வகையில் மன நிம்மதியை அடிப்படையாக கொண்டு ஈப்போ தாவீதின் கூடாரத்தின் பேராயர் டாக்டர் மேனன் மானசா வரும் 21 ஆம் தேதியன்று "சுகமளிக்கும் குருசேட்" எனும் நிகழ்வினை ஜோகூர் ஸ்கூடாயில் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த அற்புத நிகழ்வு இங்குள்ள *குட் ஹோப் தங்கும் விடுதியில்* இரவு 7 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஈப்போ, தாவிதின் கூடாரத்தில் நடைபெற்ற உலக புகழ்பெற்ற பாடகர் பென்னி ஜோன்‌ ஜோசப் இசை நிகழ்விற்கு பின்னர்‌ பேராயர் டாக்டர் மேனன் மானசா  கூறினார்.

"குருசேட்" என்பது சிலுவைப்‌போர் அல்லது அறப்போர் என்று சொல்லலாம்.

மன நிம்மதியை அற வழியில் இயேசு கிறிஸ்துவின் வழிக்காட்டலில் கொண்டு வரும் இந்த "சுகமளிக்கும்" நிகழ்வில் அனைவரும் வந்து கலந்து கொள்ளலாம்.

இது தொடர்பான விவரங்கள் அறிய 01112409932 சகோதரி புஸ்பா என்பவரை கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் அழைக்கலாம் என்றார்.

தொடர்ந்து இன்று தேவாலயமே அதிரும் படியாக தந்தை இயேசு‌ பற்றி பாடிய‌‌ பென்னிக்கு அவர் பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.

பாடல்கள் மத்தியில் தேவன் தம் வாழ்க்கையில் ஏற்படுத்திய சிறந்த மாற்றங்களை பென்னி ஜோன் ஜோசப் எடுத்துரைத்து அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை மூட்டியது.

ஜெபம், வழிப்பாடு தவிர்த்து பல நிகழ்வுகளையும் ஈப்போ, தாவிதின் கூடாரம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர் பிப் 15-
அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கும் விவகாரம் தொடர்பாக லெசென்ஸ் பெற்ற ஏஜென்சிகளை அழைத்து மனிதவள அமைச்சு ஒரு சுமூகமான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று Persatuan Agensi Pekerjaan Malaysia  கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டப்பூர்வமாக அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கும் லெசென்ஸ் பெற்ற மலேசிய ஏஜென்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வேண்டும்.

நாங்கள் முறையாக பதிவு பெற்ற ஏஜென்சிகள்.

நாங்கள் செய்யும் வேலைக்கு மட்டுமே ஊதியம் வாங்குகிறோம்.

வெளிநாட்டு ஏஜென்சிகள் தொழிலாளர்களிடம் 20,000 வெள்ளி பணத்தை வாங்கிக் கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
இதனால் பணத்தை கொடுத்து தொழிலாளர்கள் அவதி படுகிறார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர் ஏஜென்சிகளுக்கு அனுமதி வழங்க  வேண்டும்.

நாங்கள் அரசாங்கத்திற்கு உதவ தயாராக இருக்கிறோம்.

எவ்வித முறைகேடு இல்லாமல் அந்நியத் தொழிலாளர்களை சட்டப் பூர்வமாக நாட்டிற்கு தருவிக்கும் அனுமதியை பதிவு செய்யப்பட்ட ஏஜென்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று Persatuan Agensi Pekerjaan Malaysia உதவித் தலைவர் சுரேஷ் டான் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதில் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

இந்த தருணத்தில்
அந்நியத் தொழிலாளர்களை தருவிக்கும் மூன்றாம் தரப்பு - இடைத்தரகர்கள் யார் என்பதை மனிதவள அமைச்சு தெளிவு படுத்த வேண்டும்.

நேப்பாளம் மற்றும் வங்காள தேச தொழிலாளர்களை நாட்டிற்கு தருவிக்கு தலா 20,000 வெள்ளி வாங்குவது  ஏஜென்சிகள் நாங்கள் அல்ல.

ஆகவே இந்த விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காண மனிதவள அமைச்சை சந்தித்து கலந்துரையாட தயாராக இருக்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் Persatuan Agensi Pekerjaan Malaysia ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ பாகோ சிவா கலந்து கொண்டார்.

நாட்டில் பல துறைகளில் குறிப்பாக சிறுதொழில் வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்கு உதவ சங்கம் தயாராக இருக்கிறோம்.

இருப்பினும் அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்கு வரவழைக்க சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தை பிறக்கும் முதல் நாளே தமிழர் புத்தாண்டு என மலேசிய திராவிட கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் கூறினார்.

இந்த நாளை தமிழர்கள் அனைவரும் குடும்பத்தாருடன் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

தமிழ் புத்தாண்டு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தாலும் தமிழர்களாகிய நாம் தை முதல் நாளேயே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி அதனை அடுத்த தலைமுறையினர் வரையில் கொண்டுச் சேர்க்க  வேண்டும். எதற்காகவும் யாருக்காகவும் இதனை நாம் விட்டு கொடுக்க கூடாது.

குறிப்பாக, தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த மலேசியர்களின் விழாவாக கொண்டாடப்பட வேண்டும். மூவினத்தவர்களும் பொங்கல் வைத்து மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்க வேண்டும் என மலேசிய திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவில் பேசிய பொன்வாசகம் வலியுறுத்தினார்.

ஷா ஆலம் டாலியா மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவை அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஜி அஸ்லி பின் யூசோப் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன் சிறுவர்களுக்கென சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், பொங்கல் திருநாளன்று பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக கழகம் முன்னெடுத்து வந்த தீர்மானம் மீண்டும் இவ்விழா மூலம் கொண்டு வரப்பட்டது.

இவ்விழாவில் கோலாலம்பூர் உட்பட கெடா, பினாங்கு, பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களில் இருந்து 250க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.