loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

 

கோலாலம்பூர்,மார்ச்3-

2027-ஆம் ஆண்டு முதல் ஆறு வயதில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அமல்படுத்தப்பட உள்ள நிலையில், ஐந்து வயது குழந்தைகளுக்குத் தரத்தை உள்ளடக்கிய கல்வி கிடைப்பதை உறுதி செய்ய நாடு முழுவதுமுள்ள 1,781 அரசின் பெர்பாடுவான் பாலர் பள்ளிகளின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. 

நாடாளுமன்றத்தில் செனட்டர் டத்தோ டாக்டர் ஹாஜி முஸ்தபா மூசா எழுப்பிய கேள்விக்குத் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர், யுனேஸ்வரன் ராமராஜ் இவ்வாறு பதிலளித்தார்.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு துறை (JPNIN) மூலம் இந்தப் பாலர் பள்ளிகளின் திறனைக் கட்டம் கட்டமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும், தேவைகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பாலர் பள்ளியின் வகை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாணவர் சேர்க்கை திறன் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். 

கிடைக்கக் கூடிய இடங்களை முழுமையாகப் பயன்படுத்தி, உள்ளூர் தேவைக்கேற்ப மாணவர் சேர்க்கை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.

மேலும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்னணி, வளர்ச்சி நிலை மற்றும் கல்வி தேவைகள் உள்ளிட்ட முழுமையான சுயவிவரங்கள் உருவாக்கப்பட்டு, கல்வி அணுகுமுறை மேலும் உள்ளடக்கியதாகவும் சமூக தேவைகளுக்கு ஏற்பவும் வடிவமைக்கப்படுவதை அவர் உறுதிப்படுத்தினார். 

நீண்ட காலமாக, 2021–2030 கல்வி திட்டத்தின் கீழ் இந்தப் பாலர் பள்ளிகள் வலுப்படுத்தப்பட்டு, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நாட்டுப்பற்று மதிப்புகளை மேம்படுத்தும் முக்கிய கல்வி அமைப்பாகச் செயல்படுகின்றன என்பதையும் யுனேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.


கோலாலம்பூர், மார்ச் 3-
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள மலேசியர்களை பாதுகாப்புடன் மீட்க வெளிவிவகார அமைச்சகம் உடனடி மற்றும் தீர்மானமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் முற்போக்கு   கட்சியின் (பிபிபி) தேசிய இளைஞர் தலைவர் சத்தியா சுதாகரன்  வலியுறுத்தியுள்ளார்.
போர் நிகழும் பகுதியில் தங்கியுள்ள மலேசிய மாணவர்கள், தொழிலாளர்கள், யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு, நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பற்றிய  கவலைகளை எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச அவசரநிலைகளில், வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களை பாதுகாப்பது அரசின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

சர்வதேச அமைப்புகள் மற்றும் அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து அவசர வெளியேற்ற மற்றும் மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட செயற்பாட்டு குழுவையும், 24 மணி நேர உதவி அழைப்புக்கான ஹாட்லைனையும் அமைக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள மலேசிய தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் வழியாக தொடர்ச்சியான மற்றும் தெளிவான தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசின் தெளிவான தகவல் மற்றும் அவசர நடவடிக்கை, அவர்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியர்களின் பாதுகாப்பும் நலனும் அரசியல் எல்லைகளை மீறிய ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், மனிதாபிமான ஒருங்கிணைப்பு முயற்சிகளில் பிபிபி இளைஞர் பிரிவு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

பாகான் டத்தோ, பிப்.27-

என் அரசியல்  மற்றும்  பொது வாழ்க்கையில் நான் எப்போதும் மக்களிடத்தில் பாகுபாடு பார்த்ததே இல்லை என டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட்  ஹமிடி  மனம் திறந்து பேசினார்.

இன்று தனது பாகான் டத்தோ  நாடாளுமன்ற தொகுதியில் 1,000 இந்திய  மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கிய  டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் இது என் கடமை என்றார்.

அதோடு என் பொது வாழ்க்கையில் நான் கடை பிடிக்கும் ஒரே விஷயம்  நான் இன மத பாகுபாடு பார்க்கமாட்டேன்.

என்னை பொறுத்தவரை, எனக்கு எல்லாரும் சமம். எல்லோருடைய உரிமையும் பாதுகாக்கப்பட  வேண்டும். அதோடு எல்லாருக்கும் அடிப்படை வசதி, தேவையான  உதவி கிடைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இந்திய சமுதாயத்தின் மீது எனக்கு  தனி அன்பும் மரியாதையும் உண்டு. அவர்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்றார் அவர்.

பாகான் டத்தோ, பிப்.27-
பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியிலுள்ள இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்த வட்டாரத்திலுள்ள 200 பாலர்பள்ளி மாணவர்களுக்கு வெ.20 ஆயிரம், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வெ.69,100 மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு வெ.28 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ்ப்பள்ளிகளை பிரதிநிதித்து அனைத்துலக போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அன்பளிப்புகளும் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடரும் 10 இந்திய மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.

பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரும் துணைப் பிரதமடருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் இந்த அன்பளிப்புகளை எடுத்து வழங்கினார்.

மாணவர்களின் கல்வியின் மீது அக்கரை கொண்டு அவர் இந்த உதவியை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த தொகுதியிலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்க வேண்டும் என்று தான் கூறியபோது, தொகுதியிலுள்ள பாலர்பள்ளிகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கும் நாம் உதவ வேண்டும் என்று கூறி இந்த உதவிகளை அவர் வழங்கியதாக அவரின் சிறப்பு அதிகாரி அர்வின் அப்பலசாமி தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிப் 26-

2025-ஆம் ஆண்டு தென்கிழக்காசிய (SEA Games) விளையாட்டு போட்டியில் மலேசிய கபடி அணி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்தச் சாதனையைத் தொடர்ந்து, மலேசிய கபடி சங்கத் தலைவர் பீட்டர், தேசிய கபடி அணியின் நிர்வாகி, கபடி வீரர்கள், பயிற்றுனர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களைத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். கபடி வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில் துணையமைச்சர் நற்சான்றிதழ்கள், நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

கபடி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும். அதனைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் நமது ஒவ்வொருவரின் கடமையாகும். இதற்காக கபடி விளையாட்டாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்றார் துணையமைச்சர்.

தற்போது பல இனங்கள், மொழிகள் மற்றும் கலாச்சார பின்னணியைக் கொண்ட இளைஞர்களை ஒரே மேடையில் இணைக்கும் திறன் கபடி விளையாட்டிற்கு இருப்பதாகவும், இது பரஸ்பர புரிதல், ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்றை வளர்க்கும் வலுவான கருவியாகச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் கபடியைத் தொழில்முறை ரீதியில் மேம்படுத்த சிறப்பு வசதியுடன் கூடிய கபடி அரங்கம் அமைக்க வேண்டும் என்ற மலேசிய கபடி சங்கத்தின் கோரிக்கையைக் குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்கத் தாம் தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார்.

மேலும், கபடி விளையாட்டை இந்திய சமூகத்தைத் தாண்டி அனைத்து இனங்களிடமும் கொண்டு சேர்க்க சமூக ஊடகங்களை வலுவாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அரசு தொடர்புடைய நிறுவனங்கள் (GLC) மற்றும் பொதுமக்கள் வழியாக நிதி ஆதரவைப் பெறும் முயற்சிகளை கபடி சங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, மலேசிய கபடி சங்கத் தலைவர் பீட்டர், தங்களின் சாதனைகளுக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், கபடி வீரர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு அவர்களுக்குப் பெரும் ஊக்கமாக இருப்பதுடன், இது அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

கபடி தற்போது சீ, ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் நிலைகளில் இடம்பெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளிலும் கபடி இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.