loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிரம்பான், மே 16 —

நாடு முழுவதிலிருந்தும் வந்த சுமார் 300 மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் கலந்து கொண்ட “ஸ்மார்ட் ரைடர்ஸ்” தேசிய ஒன்று கூடல் நேற்று இரவு சிரம்பானில் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்மார்ட் ரைடர்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சிரம்பான் காடோங் ஜெயாவில் உள்ள பெட்ரோன் பெட்ரோல் நிலையத்தில் தொடங்கியது. அங்கு ஒன்று திரண்ட பைக்கர்கள் அணிவகுத்து ஊர்வலமாக பயணித்து, பின்னர் View Park Restaurant-இல் “தேநீர் ஒன்று கூடல்” நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மஇகாவின் தேசிய விளையாட்டுப் பிரிவின் தலைவர் எண்ட்ரு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பொறுப்பு, கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து உரையாற்றியதுடன், பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார்.

டத்தோ பாலன் நாயர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடல், மாநில மற்றும் வட்டார அளவுகளில் செயல்பட்டு வரும் சிறு பைக்கர் குழுக்களை தேசிய ரீதியில் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக எண்ட்ரு தெரிவித்தார்.

மேலும், உறுப்பினர்கள் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த நிகழ்வு வழிவகுத்ததாக அவர் கூறினார்.

ஒரே இடத்தில் 300-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் ஒன்று கூடிய இந்த நிகழ்வு மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் சிறப்பம்சமாக, சு. கதிரவன் கௌரவிக்கப்பட்டார். அவர் 109 நாடுகளில் 2,08,941 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

புவி வெப்பமாதல் மற்றும் வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தனது 62-ஆவது வயதில் 2023 ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய இந்த உலகப் பயணத்தை, 65 வயதில் இந்த ஆண்டு மே 9ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்தார். பயணத்தின் போது பல்வேறு நாடுகளில் 190 மரங்களை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் அவர் பங்களித்துள்ளார்.

கோல சிலாங்கூர், மே 16 -
கெஅடிலான் கட்சியின் கோல சிலாங்கூர் கிளையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், கிளைத் தலைவர் எம். சிவபாலனை எதிர்த்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஏற்ப்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்ப்பட்டது.

கூட்டம் முடிந்து சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு குழுவினர் மீண்டும் மண்டபத்திற்குள் நுழைந்து, சிவபாலனை எதிர்த்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன் விவாதிக்கப்படவில்லை அல்லது வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை என விளக்கம் கோரியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிளைத் தலைவர் எம். சிவபாலன் கூறுகையில், அந்த தீர்மானம் ஏற்கப்பட்டாலும், அது கட்சியின் மத்திய தலைமையிடம் பரிசீலனைக்காக அனுப்பப்படும் என முன்மொழிந்தவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

அவர்கள் அதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் இது ஒரு தீர்மானம் மட்டுமே. அதனை வாக்கெடுப்புக்கு விட முடியாது. அது கட்சியின் உயர்மட்ட தலைமையிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

அந்த தீர்மானத்தில் இரண்டு அம்சங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், ஒன்று தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் மற்றொன்று கிராமத் தலைவர்களின் நியமனம் தொடர்பானதாகவும் அவர் கூறினார்.

“இந்த இரண்டு விவகாரங்களும் கிளை மட்டத்தில் முடிவு செய்யக்கூடியவை அல்ல. நம்பிக்கையில்லா தீர்மானம் கட்சியின் உயர்மட்ட தலைமையிடம் அனுப்பப்பட வேண்டும். கிராமத் தலைவர்களை நியமிப்பதும் எங்கள் அதிகார வரம்பிற்குள் இல்லை,” என்றார்.

இந்த பரபரப்பில் மூன்று பெண் உறுப்பினர்கள் காயமடைந்ததாகவும், சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிவபாலன் தெரிவித்தார்.

மேலும், ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு முன்பாக தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அதுதொடர்பாக நேற்று தனியாக போலீஸ் புகார் செய்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கெஅடிலான் பொதுச் செயலாளர் ஃபுசியா சாலே சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், “கோல சிலாங்கூர் கிளை கூட்டம் கட்சியின் அரசியலமைப்புக்கு ஏற்ப சுமூகமாகவும் சட்டபூர்வமாகவும் நடைபெற்றது” என்றார்.

கடந்த சில வாரங்களாக, கிளைத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்கட்சி பதற்றங்களால் கெஅடிலான் கோல சிலாங்கூர் கவனத்தை ஈர்த்திருந்தது.

கோலாலம்பூர், மே 15 –

வருமான பாதிப்பால் பிபிஆர் வீடுகளில் வசித்து வரும் குறைந்த வருமான மக்களுக்கு, வீட்டு வாடகை பாக்கியை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

பொருளாதார சிக்கல்களால் அவதிப்பட்டு வரும் பலர், தங்களது வீட்டு வாடகை கட்டணங்களை முறையாக செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனால், வாடகை பாக்கி தொகை பல லட்சம் வெள்ளியை எட்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில், வாடகை பாக்கி காரணமாக சம்பந்தப்பட்ட குடும்பங்களின் வீடுகள் பூட்டப்படும் அபாயம் இருப்பதால், அவர்கள் மேலும் கடுமையான சுமையையும் நெருக்கடியையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறினார்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாக்கி தொகையை படிப்படியாக செலுத்துவதற்கான வாய்ப்பை டிபிகேஎல் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“உதாரணமாக, ஒருவர் RM5,000 வாடகை பாக்கி வைத்திருந்தால், முதற்கட்டமாக 25 விழுக்காடு தொகையை செலுத்த அனுமதி வழங்கலாம். பின்னர், மாதாந்திர வாடகை கட்டணத்துடன் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் முறையை பரிசீலிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறு செயல்பட்டால், வாடகை பாக்கி பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக டத்தோ பண்டாருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதனை பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் டத்தோ டாக்டர் லோகபாலா கூறினார்.

மேலும், இந்த தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் பணியில், விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன் தலைமையில் தொகுதி தலைவர்கள் மற்றும் மகளிர் அணியினர் களமிறங்கி செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வாடகை பாக்கி பிரச்சனையால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இனம், மதம், மொழி பாராமல், வசதி குறைந்த மக்களுக்கு பிபிபி கட்சி எப்போதும் அரணாக இருக்கும்,” என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே 14 –

அசாம் பாக்கியின் பொது பங்குதாரத் தொடர்பான சர்ச்சை குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் கண்டறிதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

The Asian Banker Summit 2026 மாநாட்டின் போது The Edge ஊடகத்திடம் பேசிய அவர், சட்டத்துறை தலைமை அதிகாரி டான் ஸ்ரீ மொஹ்த் துசுக்கி மொக்தார் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை நிறைவு செய்து அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

எனினும், அரசின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மேற்கொண்டுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு இதுவரை தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜ.செ.க் கட்சியின் தேசிய தலைவருமான கோபிந்த் சிங் டியோ, இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் மீண்டும் விவாதிக்கப்படவில்லை என்றும், தற்போதைய நிலை மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் தலைமைச் செயலாளரிடம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

“இறுதியில் மக்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறார்கள். எனவே, இந்த விவகாரத்தின் தற்போதைய நிலை என்ன, விசாரணையின் முடிவுகள் என்ன, தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதனை வெளிப்படையாக விளக்கும் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சர்ச்சை, Bloomberg வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து பெரும் கவனத்தை ஈர்த்தது. அதில், முன்னாள் MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி, Velocity Capital Partner Bhd நிறுவனத்தில் 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாகவும், அதன் மதிப்பு சுமார் RM800,000 எனவும் தெரிவிக்கப்பட்டது. இது அரசுப் பணியாளர்களுக்கான RM100,000 பங்கு வைத்திருக்கும் வரம்பை மீறுவதாகக் கூறப்பட்டது.

அசாம் பாக்கி, அந்த பங்குகளை வாங்கியதை ஒப்புக்கொண்டிருந்தாலும், பின்னர் அவற்றை விற்றுவிட்டதாகவும், தாம் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையராக பணியாற்றிய அசாம் பாக்கி, கட்டாய ஓய்வு வயதை கடந்த பின்னரும் மூன்று முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மே 12 அன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம், மே 13 முதல் புதிய தலைமை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோலாலம்பூர்,மே 14-

பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாதோர் நலன் காக்கும் இணை பிரிவான டி.எச்.பி.பி (dewan himpunan pendukung pas) அதன் தலைவராக கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி அவர்களின் சிறப்பு அதிகாரி குமரேசன் பேராளர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

தலைவர் பதவிக்கு டத்தோ தீபாகரன் மற்றும் குமரேசன் போட்டியிட்ட நிலையில் குமரேசன் அதிக வாக்கு பெற்று தேர்வு செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் துணைத் தலைவர் பதவிற்கு போட்டி இல்லாத நிலையில் லீம் குவான் செங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

உதவி தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவிய நிலையில் சூரிய நாரயணன் வெற்றி பெற்று தேர்வு செய்யப் பட்டார்.

அதே நேரத்தில் செயலவை உறுப்பினர்களுக்கு 30 பேர்கள் போட்டி போட்ட நிலையில் வாக்கெடுப்பில் பூபாலன் அதிக வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றிப் பெற்றார் .

அவரை தொடர்ந்து லோவ் லீ லீயோங், டத்தோ ராகு, டத்தோ குமார், ,ஹரி ஜானார்தன், சரோஜினி, குண சீலன், பரமசிவம், குணாளன், கணேசன், சோ சியூ மார், ஜெய குமார், சங்கரன், புனிதா பச்சையம்மா, புருத்சோதினி, குண சேகரன் மற்றும் லாவ் சின் சுவா ஆகையோர் செயலவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.