loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

புத்ராஜெயா, ஏப்.22-

டுரியான் துங்கால்  துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை குறித்து சட்டத்துறை தலைவர் (AG) வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜாசேகாவின் தேசிய தலைவரும்  டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் டிஜிட்டல் அமைச்சருமான கோபின் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து சுமார் ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக தெளிவான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை தெரிகிறது.

இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆதரிக்கும் வகையில் ஒலிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து விளக்கம் கோருவது முற்றிலும் நியாயமானது.

இது பொதுமக்கள் சார்ந்த ஒரு முக்கிய விவகாரம். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தங்களுக்கு நீதி மற்றும் நியாயமான பதில்கள் கிடைக்கப்பட வேண்டும் என  எதிர்பார்க்கின்றனர்.

எனவே இந்த வழக்கின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை சட்டத்துறை தலைவர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோபின் சிங் அறிக்கை விடுத்துள்ளார்.

பத்துமலை, ஏப்.19-
பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் 2026ஆம் ஆண்டிற்கான இளம் தலைவர்களுக்கான பதவி நியமன விழா (Majlis Pelantikan Watikah Pemimpin Muda 2026) இன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவன் நவயுக பாரதி த/பெ தியாகராஜன் இறை வாழ்த்து பாடினார். தொடர்ந்து முனைவர் விக்டர் ஆசிர்வாதம் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி செளண்டேஸ்வரி கிருஷ்ணன் தலைமையுரை வழங்கினார்.
இவ்விழாவின் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட தொடர்புத் துறை அதிகாரி சர்ஜன் கமால் லிங்கம், இளம் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார். தொடர்ந்து, இளம் தலைவர்களுக்கான பதவி நியமன நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் ரத்னக்குமார் வரதராஜு, சர்ஜன் கமால் லிங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ புவனேந்திர குமார், தலைமையாசிரியர் மற்றும் துணை தலைமையாசிரியர்கள் இணைந்து கலந்துகொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, பள்ளியின் தலைமை மாணவராக அரண் த/பெ திலிப்குமார் கனகராஜ், முதல் துணைத் தலைமை மாணவியாக ஜனனி த/பெ ஹரிராஜா, இரண்டாம் துணைத் தலைமை மாணவராக தேவ்தர்ஷன் த/பெ சிவகாந்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனச் சான்றிதழ்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.
மேலும், மாணவர் தலைவர்கள், கருவளமைய தலைவர்கள் மற்றும் வழிகாட்டித் தலைவர்கள் என மொத்தம் 238 மாணவர்கள் பதவி நியமனச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
பள்ளியின் நெறியுரைஞர் குமாரி வித்யா தியாகராஜா, நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி புனிதவள்ளி முனீஸ்பரன் மற்றும் மாணவர் தலைவர்களின் பொறுப்பாசிரியர் குமாரி துர்காஷினி சுப்பிரமணியம் ஆகியோரின் தலைமையிலும், ஆசிரியர்கள் ஒத்துழைப்பிலும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிய தேவஸ்தான தலைவர் டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா, மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர் மற்றும் நலத்திட்ட உறுப்பினர்கள் ஆகியோருக்கு தலைமையாசிரியர் நன்றி தெரிவித்தார்.
“இன்றைய தலைவர்கள் நாளைய சமுதாயத்தின் தூண்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், ஏப்.19-
சட்டத்திற்கு புறம்பாக அந்நியர்களால் நடத்தப்படும் உலோக மறுசுழற்சி மையங்கள் தொடர்பாக கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. இத்தகைய மையங்கள் பல இடங்களில் இயங்கிக் கொண்டிருப்பது தெரிந்திருந்தும், அமலாக்க அதிகாரிகள் அதனை கண்டும் காணாதது போல் இருப்பதாக குற்றச்சாட்டை மிம்தா எனப்படும் மலேசிய இந்திய உலோக மறுசுழற்சி மைய உரிமையாளர் சங்கம் முன்வைத்துள்ளது.

இந்த நிலையைக் குறித்து மிம்தா தீவிர கவலை வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்படும் இம்மையங்கள் திருட்டு பொருட்கள் விற்பனைக்கு வழிவகுக்கின்றன என்றும், இதனால் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சங்கத்தின் செயலாளர் முத்தப்பன் தெரிவித்தார்.

திருட்டு பொருட்களை வாங்குபவர்கள் மீது இதுவரை எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வியை மிம்தா முன்வைத்துள்ளது. 

சட்டத்தை மீறும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான அமலாக்கம் தேவைப்படுகின்றது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முறையான வியாபார உரிமைத்தை வைத்திருக்கும் எங்களின் மையங்களில் வாரத்திற்கு ஒரு முறை அமலாக்கப் பிரிவினர் சோதனையை மேற்கொள்கிறார்கள். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு எங்களின் வியாபாரம் பாதிப்படைகிறது என்றும் முத்தப்பன் கூறினார்.

ஆனால் சட்டத்திற்கு புரம்பாக மூன்று சக்கர மோட்டாரில் உலோக பொருட்களை சேகரிக்கும் அந்நியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, அவர்கள் தற்போது லோரிகளை கொண்டு இந்த வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் சிலர் சொந்தமாக உலோக மறுசுழற்சி மையங்களை வழிநடத்தியும் வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், சட்டவிரோத செயல்களை முழுமையாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மிம்தா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது  எதிர்பார்ப்பாக உள்ளது. உடனடி நடவடிக்கையை அவர்கள் முன்னெடுப்பார்கள் என்று நாம் நம்புவோம் என்றார்.

 

கோலாலம்பூர், ஏப்.19-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்தித்து இந்திய முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக பேச துணை பிரதமரும்  தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஸ்ரீ ஜாஹிட்  ஹமிடி வாயிலாக உதவி கேட்டும் இப்போது வரை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு  கிடைக்கவில்லை.

ஆனால்  கடிதம் மட்டும் வருகிறது. இந்த அமைச்சை பாருங்கள் அந்த அமைச்சை பாருங்கள் என்று. அவர்களை சந்தித்தால் எந்த பதிலும் இல்லை. இது எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள் என கிம்மா தலைவர் 
டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிறகு திரும்பவும் பிரதமர் துறைக்கு கடிதம் எழுதினால் நேரம் இல்லை என்ற பதில் எங்களுக்கு வருகிறது.

கிம்மா கட்சி என்பது 50 ஆண்டுகள் வரலாறு உள்ள கட்சி ஆனால் எங்களுக்கு இந்த் அரசாங்கத்தில் கிடைக்கும் மரியாதை மனநிறைவு கொடுக்கவில்லை என்றார்.

1மில்லியன் இந்திய முஸ்லிம்  வாழும் இந்த நாட்டில் அந்த சமுதாயத்தை பிரதிநிதிக்கும் கிம்மா கட்சியை சந்திக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு நேரம் இல்லை... ஆனால்   இந்திய நடிகர்களான ரஜினி- கமல் என்ற நடிகர்களை சந்திக்க நேரம் உண்டும் என கிம்மா தலைவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

எங்கள் சமுதாயமும் வீதியில் வந்து போராடா வேண்டுமா அல்லது பிரதமர் அலுவலகத்தில் வந்து மறியல் செய்ய வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் உங்கள் அமைச்சர்கள் மலேசிய இந்திய முஸ்லீம் சமுதாயத்தின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பது இல்லை. சரி பிரதமரை சந்தித்து சொல்லலாம் என்றால் இந்த விவகாரத்தில் பிரதமர் கவனம் செலுத்த நேரம் இல்லை என்றார் கிம்மா தலைவர்.

எங்கள் பிரச்சினை பிரதமர் துறை உடனே கவனிக்க வேண்டும் இல்லை என்றால் எங்களுக்கும் ( reformasi ) தெரியும்.  எங்களின் பிரச்சினையை பிரதமர் பார்வைக்கு கொண்டு செல்ல ஒரு சமுதாய முன்னெடுப்பு நடக்கும் என்றார் கிம்மா தலைவர்.

நாங்களும் இந்த நாட்டு மக்கள் ,  இந்திய நாட்டு பிரபலமான ரஜினி கமலுக்கு உள்ள முக்கியதுவம். ஏன் 1 மில்லியன் வாக்கு வைத்துள்ள  எங்கள் சமுதாயத்திற்கு இல்லை என கிம்மா தலைவர் டத்தோ ஸ்ரீ சைட் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நாட்டில் சிறுபான்மையான நாங்கள் 126 தொழில் துறையில் ஈடுபட்டு  தொழில் செய்து நாட்டின் மேம்பாட்டிற்கு எங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறோம் ஆனால் அரசாங்கத்தின் பார்வை எங்கள் சமுதாயத்தின் மீது பட வில்லை என்பது  மிகப் பெரிய கேள்வியை எழுப்புவதாக கிம்மா தலைவர் தெரிவித்தார்.

செய்தி : வெற்றி விக்டர்

 

கோலாலம்பூர், ஏப்.18-
அரசியல் என்றால் அதில் அனைவருக்கும் ஒரு கனவு அல்லது எதிர்கால சிந்தனை இருக்கலாம். ஆனால் கூட்டணி என்று வந்துவிட்டால் அதில் விசுவாசம் இருப்பது அவசியம் என தேசிய முன்னணியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தெரிவித்தார்.

அந்த வகையில் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அதன் பின்னர் மீண்டும் தேசிய முன்னணிக்குள் வருவதாக அறிவிப்பது சம்பந்தப்பட்ட கட்சி கூட்டணிக்கு உண்மையாக இல்லை என்பதை காட்டிவதாக அவர் சொன்னார்.

மேலும் சம்பந்தப்பட்ட கட்சி இன்னும் இருக்கிறதா அல்லது செயலிழந்து விட்டதா என்பது தெரியவில்லை என்ற அவர், எந்த கட்சி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என மறைமுகமாக கூறினார்.

கிம்மாவின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று தலைநகர் உலக வாணிப மையத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தை அதிகாரப்பூரவாக வினைக்கு வைத்த அவர் இவ்வாறு கூறினார்.

பல ஆண்டுகளாக ஒரு கூட்டணியிலிருந்து விட்டு அந்த கூட்டணியை விட்டு விலகுவதாக கூறிவிட்டு மற்ற கூட்டணியில் இணைய திட்டம் வகுப்பது மாபெரும் துரோகமாகும் என அவர் மேலும் அழுத்தமாக கூறினார்.

அந்த வகையில் தேசிய முன்னணியின் தோழமை கட்சியாக இருக்கும் கிம்மா கூட்டணிக்கு உண்மையாக இருப்பதாக அவர் பெருமையாக கூறினார்.