loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், ஜூன் 10-
எஸ்டிபிஎம் (STPM) கல்வியைத் தொடரும் மாணவர்கள் தங்களது விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது என்றும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா வலியுறுத்தியுள்ளார்.

எஸ்டிபிஎம் என்பது அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான முக்கியமான கல்விப் பாதையாக இருப்பதால், மாணவர்கள் தங்களது உயர்கல்வி இலக்குகளுக்கு ஏற்ப பாடங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு ‘பேக்கேஜ்’ (Pakej) முறையில் பாடங்கள் வழங்கப்படுவதால், பல மாணவர்கள் தாங்கள் விரும்பும் கூடுதல் பாடங்களைத் தேர்வு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

குறிப்பிட்ட பாடத்திற்கு ஆசிரியர் இல்லாத சூழலில், அந்த பாடத்திற்கான ஆசிரியரை கல்வி அமைச்சிடம் கேட்டு பெற வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமையாகும். உங்களின் தவற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து விடாதீர்கள்.

“ஒரு மாணவர் சரியான பாடத்தைத் தேர்வு செய்ய முடியாவிட்டால், அவரது கனவுகளே சிதைந்து போகும். இது அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கும் தடையாக அமையும்,” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் வருடத்திற்கு சுமார் 40,000 மாணவர்கள் எஸ்டிபிஎம் தேர்வை எழுதுகின்றனர். அவர்களில் சுமார் 4,000 பேர் இந்திய மாணவர்கள் என மதிப்பிடப்படுகின்றனர். ஆனால், தமிழ்மொழி பாடத் தேர்வை எழுதுபவர்கள் அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே, அதாவது சுமார் 15 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ்மொழியைத் தேர்வு செய்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்மொழி பாடத்தை இந்திய மாணவர்கள் கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும். கடந்த 2024ஆம் ஆண்டு எஸ்டிஎம் தேர்வில் 526 மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை தேர்வு செய்திருந்தனர். இரண்டாவது தவணையில் அந்த எண்ணிக்கை 426 மாணவர்களாக குறைந்த வேளையில் மூன்றாவது தவணையில் அதன் எண்ணிக்கை 453ஆக குறைந்துள்ளது. ஏன் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றார் அவர்.

இந்நிலையில், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஸ்ரீ முருகன் நிலையம் வரும் ஜூலை மாதம் முதல் எஸ்டிபிஎம் தமிழ்மொழிப் பாடத்திற்கான இலவச இணையவழிக் கல்வியை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.

“தமிழ்மொழியைப் படிக்க விரும்பும் மாணவர்கள் தைரியமாக ஸ்ரீ முருகன் நிலையத்தில் கற்கிறோம் என்று பள்ளிகளில் கூறலாம். அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார்.

மேலும், மாணவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு  உடனடியாகத் தீர்வு காண வேண்டும். ஏனென்றால் எஸ்டிபிஎம் பாடத் தேர்வை மாணவர்கள் இந்த ஒருவாரத்தில் முடிவு செய்தாக வேண்டிய சூழல் உள்ளது.

“அரசின் கல்விக் கொள்கையின்படி மாணவர்களுக்கு பாடங்களைத் தேர்வு செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஏன் பேக்கேஜ் முறை கொண்டு வரப்பட்டுள்ளது?” என அவர் கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்க வேண்டாம் என்றும், அவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுரேன் கந்தா வலியுறுத்தினார்.

சிரம்பான், ஜூன் 4-
36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம், 16ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் நாளை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படவுள்ளது.

இவ்விவரத்தை நெகிரி செம்பிலான் மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூன், தனது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இன்று அறிவித்தார்.
மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதன் மூலம், மாநிலத்தின் புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான 16ஆவது மாநிலத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர், ஜூன் 2 –

எஸ்.பி.எம் தேர்வில் விருப்பப் பாடமாக தமிழ்மொழியைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் மத்திய தலைமைக் குழு உறுப்பினருமான சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் நிர்வாகி சுரேன் கந்தா அவர்கள் வெளியிட்ட செய்தி அறிக்கையின் மூலம் அவர் முன்வைத்துள்ள பிரச்சினைகள் கவலைக்குரியவை என்றும், மாணவர்களின் மொழிக் கல்வி உரிமை மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் விவகாரமாக இதனை அணுக வேண்டும் என்றும் சிவமலர்  தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் சேர்ந்த 13,688 மாணவர்களில், 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தை எழுதியவர்கள் வெறும் 7,609 பேர் மட்டுமே எனக் குறிப்பிட்ட அவர், இது சுமார் 45 விழுக்காடு வீழ்ச்சியைக் காட்டுவதாகச் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

இந்த வீழ்ச்சி பள்ளி மட்டத்திலான அமலாக்கம், நிர்வாக நடைமுறைகள் குறித்தும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே உள்ள  விழிப்புணர்வு உட்பட மேலும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்விக்கு வழங்கப்படும் ஆதரவு போன்ற அம்சங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்புவதாக அவர் கூறினார்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமிழ்மொழிக் கல்விக்கான அணுகலை எளிதாக்கும் வகையில் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டதை நினைவுகூர்ந்த சிவமலர், அது சமூகத்தின் நீண்டகால கோரிக்கைகளுக்கு சாதகமான நடவடிக்கையாக அமைந்ததாக தெரிவித்தார்.

அதேபோல், மலாயா பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டு திருவள்ளுவர் இருக்கை நிறுவப்பட்டதும், தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் ஆய்வுகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தேவையற்ற நிர்வாகத் தடைகள் இன்னும் தொடர்வதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு பாங்கியில் நான்கு மாணவர்கள் தமிழ்மொழி எஸ்.பி.எம். பாடத்திற்குப் பதிவு செய்யத் தடுக்கப்பட்ட சம்பவத்தை எடுத்துக்காட்டினார்.

பொதுமக்கள் மற்றும் பல தரப்பினரின் தலையீட்டிற்குப் பிறகே அந்த முடிவு மாற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்மொழி போன்ற அங்கீகரிக்கப்பட்ட பாடத்தைப் படிக்கவும் தேர்வெழுதவும் மாணவர்கள் தேவையற்ற அலுவலகச் சிக்கல்களையும் முரண்பட்ட விதிமுறை விளக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கக்கூடாது. கல்வி மற்றும் மொழி உரிமைகள் நிர்வாகச் சிக்கல்களால் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே, தமிழ்மொழிப் பாடத்தில் மாணவர்கள் பங்கேற்பு குறைந்து வருவதற்கான காரணங்களை கல்வி அமைச்சு முழுமையாக ஆய்வு செய்து, தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் எந்தத் தடையும் இன்றி தமிழ்மொழிக் கல்வியையும் தேர்வையும் அணுகக்கூடிய வகையில் நாடு தழுவிய தெளிவான கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சிவமலர் கணபதி கேட்டுக்கொண்டார்.

தமிழ்மொழிக் கல்வியின் எதிர்காலம் ஒவ்வொரு பிரச்சினையும் எழும் போதும் தனித்தனியான தலையீடுகளின் அடிப்படையில் அமையக் கூடாது என்றும், நிலையான, வெளிப்படையான மற்றும் மாணவர் நலனை மையமாகக் கொண்ட தீர்வு அவசரமாக தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை:
ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, மொழி மற்றும் அடையாளத்தைப் புரிந்துகொள்வதற்கு பழஞ்சுவடி காப்பகங்கள் முக்கிய தளங்களாக விளங்குகின்றன என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.

சென்னைக்கான தனது அலுவலக் பயணத்தின் போது, எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாட்டின்பழஞ்சுவடி காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை அவர் பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வப் பழஞ்சுவடி காப்பகமாக செயல்பட்டு வரும் இந்த மையம், வரலாற்றுப் பதிவுகள், அரசாங்க ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், நிலப் பதிவுகள், அரசிதழ்கள் மற்றும் தமிழ்நாடு, முன்னாள் மெட்ராஸ் தொடர்பான ஆய்வுப் பொருட்களைப் பாதுகாத்து வருவதாக அவர் கூறினார்.

1805ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் காப்பகம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும், 1909-ஆம் ஆண்டு மெட்ராஸ் பதிவகமாகச் செயல்பட்ட பின்னர், 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு பழஞ்சுவடி காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் என மறுபெயரிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு 1670 முதல் 1857 வரையிலான கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்கள், டச்சு, டேனிஷ் மற்றும் பாரசீக மொழிப் பதிவுகள், போர்ட் செயின்ட் ஜார்ஜ் அரசிதழ்கள் உள்ளிட்ட பல அரிய ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தப் பயணம் தனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்ததாகக் கூறிய அவர், மலேசிய தேசிய பழஞ்சுவடி காப்பகமும் தேசிய ஒருமைப்பாட்டு மைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வரலாற்றுப் பதிவுகள், அரசாங்க ஆவணங்கள் மற்றும் எழுத்து வடிவிலான பாரம்பரியச் செல்வங்களைப் பாதுகாத்து, இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குவது அதன் மிகப்பெரிய பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

பழஞ்சுவடி காப்பகம் என்பது பழைய ஆவணங்களைப் பாதுகாக்கும் இடம் மட்டுமல்ல; அஃது அறிவின் மையமாகவும், ஒரு நாட்டின் நினைவகமாகவும், சமூகத்தின் வரலாறு மற்றும் அடையாளத்தைப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய தளமாகவும் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் வரலாற்றை வெறும் கடந்தகாலக் கதையாகப் பார்க்காமல், எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் தெளிவுடனும் கட்டியெழுப்ப உதவும் வழிகாட்டியாகக் காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்தப் பயணம் மலேசியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான அறிவுப் பரிமாற்றம், பண்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

கோலாலம்பூர், மே 26–

சுங்கை பெட்டாணி எஸ்.ஜி டிவிசன் பகுதியில் செயலில் இருந்த “கேங் ரமேஸ்” எனப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபரை மலேசிய அரச போலீஸ் ( PDRM) கைது செய்துள்ளது.

குற்றச்செயல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட  “ஒப் திகா” நடவடிக்கையின் கீழ் கடந்த மே 22ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்த  சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பெங்காக்கிலிருந்து இந்தியாவின் ஹைதராபாத் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுங்கை பெட்டாணி மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டின் அடிப்படையிலும், உளவுத்துறையின் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு (Red Notice) இருந்ததாலும் அந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட நபர் திட்டமிட்ட குற்றக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறார். இதுகுறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 130V கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், வரும் மே 29ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  சந்தேகநபர் மீது, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கெடா மாநிலத்தின் படாங் செராய் மற்றும் பெடோங் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி கொலை வழக்குகள் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட சந்தேகநபரை கண்டறிந்து கைது செய்ய இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் வழங்கிய நெருங்கிய ஒத்துழைப்புக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என டத்தோ எம். குமார் கூறினார்.