loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், மே 15 –

வருமான பாதிப்பால் பிபிஆர் வீடுகளில் வசித்து வரும் குறைந்த வருமான மக்களுக்கு, வீட்டு வாடகை பாக்கியை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

பொருளாதார சிக்கல்களால் அவதிப்பட்டு வரும் பலர், தங்களது வீட்டு வாடகை கட்டணங்களை முறையாக செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனால், வாடகை பாக்கி தொகை பல லட்சம் வெள்ளியை எட்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில், வாடகை பாக்கி காரணமாக சம்பந்தப்பட்ட குடும்பங்களின் வீடுகள் பூட்டப்படும் அபாயம் இருப்பதால், அவர்கள் மேலும் கடுமையான சுமையையும் நெருக்கடியையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறினார்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாக்கி தொகையை படிப்படியாக செலுத்துவதற்கான வாய்ப்பை டிபிகேஎல் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“உதாரணமாக, ஒருவர் RM5,000 வாடகை பாக்கி வைத்திருந்தால், முதற்கட்டமாக 25 விழுக்காடு தொகையை செலுத்த அனுமதி வழங்கலாம். பின்னர், மாதாந்திர வாடகை கட்டணத்துடன் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் முறையை பரிசீலிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறு செயல்பட்டால், வாடகை பாக்கி பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக டத்தோ பண்டாருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதனை பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் டத்தோ டாக்டர் லோகபாலா கூறினார்.

மேலும், இந்த தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் பணியில், விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன் தலைமையில் தொகுதி தலைவர்கள் மற்றும் மகளிர் அணியினர் களமிறங்கி செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வாடகை பாக்கி பிரச்சனையால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இனம், மதம், மொழி பாராமல், வசதி குறைந்த மக்களுக்கு பிபிபி கட்சி எப்போதும் அரணாக இருக்கும்,” என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே 14 –

அசாம் பாக்கியின் பொது பங்குதாரத் தொடர்பான சர்ச்சை குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் கண்டறிதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

The Asian Banker Summit 2026 மாநாட்டின் போது The Edge ஊடகத்திடம் பேசிய அவர், சட்டத்துறை தலைமை அதிகாரி டான் ஸ்ரீ மொஹ்த் துசுக்கி மொக்தார் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை நிறைவு செய்து அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

எனினும், அரசின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மேற்கொண்டுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு இதுவரை தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜ.செ.க் கட்சியின் தேசிய தலைவருமான கோபிந்த் சிங் டியோ, இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் மீண்டும் விவாதிக்கப்படவில்லை என்றும், தற்போதைய நிலை மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் தலைமைச் செயலாளரிடம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

“இறுதியில் மக்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறார்கள். எனவே, இந்த விவகாரத்தின் தற்போதைய நிலை என்ன, விசாரணையின் முடிவுகள் என்ன, தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதனை வெளிப்படையாக விளக்கும் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சர்ச்சை, Bloomberg வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து பெரும் கவனத்தை ஈர்த்தது. அதில், முன்னாள் MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி, Velocity Capital Partner Bhd நிறுவனத்தில் 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாகவும், அதன் மதிப்பு சுமார் RM800,000 எனவும் தெரிவிக்கப்பட்டது. இது அரசுப் பணியாளர்களுக்கான RM100,000 பங்கு வைத்திருக்கும் வரம்பை மீறுவதாகக் கூறப்பட்டது.

அசாம் பாக்கி, அந்த பங்குகளை வாங்கியதை ஒப்புக்கொண்டிருந்தாலும், பின்னர் அவற்றை விற்றுவிட்டதாகவும், தாம் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையராக பணியாற்றிய அசாம் பாக்கி, கட்டாய ஓய்வு வயதை கடந்த பின்னரும் மூன்று முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மே 12 அன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம், மே 13 முதல் புதிய தலைமை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோலாலம்பூர்,மே 14-

பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாதோர் நலன் காக்கும் இணை பிரிவான டி.எச்.பி.பி (dewan himpunan pendukung pas) அதன் தலைவராக கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி அவர்களின் சிறப்பு அதிகாரி குமரேசன் பேராளர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

தலைவர் பதவிக்கு டத்தோ தீபாகரன் மற்றும் குமரேசன் போட்டியிட்ட நிலையில் குமரேசன் அதிக வாக்கு பெற்று தேர்வு செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் துணைத் தலைவர் பதவிற்கு போட்டி இல்லாத நிலையில் லீம் குவான் செங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

உதவி தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவிய நிலையில் சூரிய நாரயணன் வெற்றி பெற்று தேர்வு செய்யப் பட்டார்.

அதே நேரத்தில் செயலவை உறுப்பினர்களுக்கு 30 பேர்கள் போட்டி போட்ட நிலையில் வாக்கெடுப்பில் பூபாலன் அதிக வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றிப் பெற்றார் .

அவரை தொடர்ந்து லோவ் லீ லீயோங், டத்தோ ராகு, டத்தோ குமார், ,ஹரி ஜானார்தன், சரோஜினி, குண சீலன், பரமசிவம், குணாளன், கணேசன், சோ சியூ மார், ஜெய குமார், சங்கரன், புனிதா பச்சையம்மா, புருத்சோதினி, குண சேகரன் மற்றும் லாவ் சின் சுவா ஆகையோர் செயலவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

கோலாலம்பூர், மே 14 -
பல மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்த மாத வாடகை கட்டண பாக்கிகளைச் செலுத்துவது குறித்து ஸ்ரீ ஆமான் குடியிருப்பாளர்கள் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்ற (DBKL) அதிகாரிகளுக்கு இடையில் முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டு, நிலுவையில் உள்ள வாடகைத் தொகைகளை ஒருமுறை அல்லது தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால், உடனடியாக முழுத் தொகையையும் செலுத்த முடியாத சூழ்நிலையை பலர் எடுத்துக்கூறினர்.

இதற்கு பதிலளித்த மாநகர் மன்ற அதிகாரிகள், குடியிருப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, நெகிழ்வான கட்டண திட்டங்கள் (installment plans) அறிமுகப்படுத்தும் சாத்தியம் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தை கோலாலம்பூர் பிபிபி  தலைவர் சத்யா மற்றும் சிகாம்பூட் தொகுதி தலைவர்   டத்தோ வினோத் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அவர்கள் , குடியிருப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல், மனிதநேய அணுகுமுறையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பில் பேசிய பிபிபி கட்சியின் கூட்டரசுப் பிரதேச தலைவர் சத்தியா, கோலாலம்பூரில் உள்ள பி.பி.ஆர் (PPR) குடியிருப்புகளில் இதுபோன்ற சந்திப்புகளை பி.பி.பி கட்சி  தொடர்ந்து ஏற்பாடு செய்யும் என தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே 13 –
சரக்கு ஏற்றுமதி ஆவணங்களுக்கும் உண்மையான சரக்கு நகர்வுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் கடல்சார் மற்றும் உலக வர்த்தகத் துறைக்கு பெரும் அபாயமாக மாறி வருவதாக கடல்சார் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மெரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ ஜெயேந்தரன் ராமசாமி கூறுகையில், Bill of Lading (BL) ஆவணம் என்பது சாதாரண கப்பல் போக்குவரத்து ஆவணம் அல்ல; அது வங்கி பரிவர்த்தனை, காப்பீடு, சுங்க அறிவிப்பு, சரக்கு உரிமை மற்றும் சர்வதேச இணக்கப்பாடு போன்ற முக்கிய அம்சங்களுடன் நேரடியாக தொடர்புடையது என்றார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள அவர், BL ஆவணங்களில் உள்ள தகவல்களும் உண்மையான சரக்கு நகர்வுகளும் பொருந்தாமல் போகும் போது செயல்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது என்று தெரிவித்தார்.

கப்பல் முகவர்கள் சரக்கின் உரிமையாளர்கள் அல்லாதபோதிலும், அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகளை அதிகாரிகள் மற்றும் துறைமுகங்கள் நம்புவதால், நேரடி பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இதனால், கப்பல் முகவர்கள் தற்போது ஆவண நம்பகத்தன்மை, உள்துறை இணக்க கட்டுப்பாடு மற்றும் Know-Your-Customer (KYC) சரிபார்ப்பு நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக எண்ணெய் வர்த்தகங்களில், வியாபாரிகள், பெறுநர்கள், துறைமுகங்கள் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் ஆரம்ப BL ஆவணங்களுடன் பொருந்தாமல் இருப்பது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சரக்குகள் மாற்றம், கலவை அல்லது சேமிப்பு நடவடிக்கைகளால் மாறும்போது, அதற்கேற்ப ஆவணங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் சுங்க பதிவுகள், டேங்க் அளவீடுகள் மற்றும் உண்மையான சரக்கு நிலைகளில் முரண்பாடுகள் உருவாகி வர்த்தக தகராறுகள், இணக்கப்பாடு குறைபாடுகள் மற்றும் வருவாய் இழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் டத்தோ ஸ்ரீ ஜெயேந்தரன் ராமசாமி எச்சரித்தார்.