loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஷாஆலம், மே 8-
மலேசிய இந்திய இளம் கால்பந்து வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் MISC டச்ட்ரானிக்ஸ் கிளப், 2026 எப்ஏஎம் பிரசிடென்ட் கிண்ண 20 வயதுக்குட்பட்டோர் லீக் தொடரில் ஆறு இந்திய இளம் வீரர்களை இணைத்து களமிறங்கியுள்ளது.
இந்த சீசனில் மொத்தம் 11 அணிகள் போட்டியிடும் நிலையில், டச்ட்ரானிக்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கூச்சிங் சிட்டி அணியை எதிர்கொண்டது. கடுமையான போட்டியாக அமைந்த இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ-கிக் வாய்ப்பை அணியின் கேப்டன் பிரவினாஷ் திறமையாக கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். பின்னர் இறுதிக்கட்டத்தில் கூச்சிங் சிட்டி அணி சமநிலை கோல் அடித்தாலும், பிரவினாஷின் தலைமைத்துவமும் நிதானமான ஆட்டமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
18 வயதான பிரவினாஷ், டச்ட்ரானிக்ஸ் கிளப்பின் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் இளம் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 18 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய அவர், தொடர்ந்து சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவரது கடின உழைப்பு, தலைமைத்துவ பண்புகள் மற்றும் விளையாட்டு திறனை மதித்து, இந்த சீசனில் அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- காளிதாசன் இளங்கோவன்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நமது நாடு உட்பட உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் வரலாற்றை அறிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும். தொழிலாளர் வர்க்கம் நிலைத்திருக்கும் வரை தொழிற்சங்கங்களின் அவசியமும் தொடர்கிறது என்பது காலத்தின் நியதி.

இன்றைய சூழலில், தொழிற்சங்கங்களின் தோற்றம், அதன் பின்னணி, அதை உருவாக்கிய முன்னோடிகள் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக, மக்கள் தலைவர்களாகப் போற்றப்படும் பி. வீரசேனன் மற்றும் எஸ்.ஏ. கணபதி யார்? அவர்களின் போராட்ட வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்கு விளக்கம் வழங்கும் நோக்கில், “வீரசேனன் - மலாயா கணபதி போராட்டமும் வரலாறும் 2.0” என்ற வரலாற்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் நாளை முன்னிட்டும், மலாயா கணபதி மற்றும் வீரசேனன் போராட்டவாதிகளின் நினைவுநாளை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த  விழா 09.05.2026 அன்று ஜொகூர், காரைநகர் நட்புறவு மையத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் முக்கிய நிகழ்வுகளாக வரலாற்று ஆவணக் கண்காட்சி , சிறப்பு காணொளி வெளியீடு மற்றும்  பேச்சுமன்றமும் நடைபெறும். முக்கிய விருந்தினராக மதிப்பிற்குரிய ரவின்குமார்  கிருஷ்ணசாமி,  ஜொகூர் மாநில ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு குழுவின் தலைவர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவார்.
முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
 

🗓️ 09.05.2026
⏰ மாலை 6.00 முதல் இரவு 10.00 வரை
📍 காரைநகர் நட்புறவு மையம்

🎯 ஊடக நண்பர்கள் இந்நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

📞 தொடர்புக்கு:
யோகி – 016-5432572
பிரவீன் – 016-7297975
மோகன் – 017-7540597
சங்கத்தமிழன் – 011-17992633

பூச்சோங், மே 3 –
கல்வி அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் திறமையான மனிதவளத்தை உருவாக்க முடியும் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

இன்று காசிபீல்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஸ்ரீ முருகன் பூச்சோங் நிலையத்தின் “கல்வி யுத்தம்” நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியை கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். 1,000க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், இந்திய மாணவர்களுக்கு 2,500 மெட்ரிகுலேசன் இடங்களை ஒதுக்க கல்வி அமைச்சு முன்வர வேண்டும் என ஸ்ரீ முருகன் நிலையம் வலியுறுத்தியது.

இதன் மூலம் கல்வியில் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வின் முடிவில் நன்னெறிக் கல்வியின் தேர்வு முடிகளில் சில சர்ச்சைகள் எழுந்துள்ளதை தொடர்ந்து அதனை மறு ஆய்வு செய்ய வேண்டுமென சுரேன் கந்தா கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, நன்னெறிக் கல்வி தேர்வின் முடிவுகள் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 10,000 மாணவர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையங்களில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜொகூர் பாரு, ஏப். 29- 

ஜொகூர்  மாநிலத் தேர்தலை (PRN16) முன்னிட்டு, புத்ரி வங்சா  சட்டமன்றம் (DUN) தொகுதியில் தங்களது வேட்பாளரை நிறுத்துவதற்கான  விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக மலேசிய மக்கள் சக்தி கட்சி   அறிவித்துள்ளது.

மக்கள் சக்தி கட்சியின் ஜொகூர் மாநில துணைத் தலைவர் ஜேம்ஸ் செல்வநாதன் கூறுகையில், தங்களது அடிமட்ட உறுப்பினர்களிடமிருந்து  இந்திய பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையும், மக்கள் தொகை ஆய்வுகளின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், தெப்ராவ் பகுதியில் கட்சியின் இயந்திரம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கலப்பணி செய்ய முழுமையான தயார்நிலை ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் , ஜொகூர் மந்திரி புசார் ஓன் ஹாபிஸ் காஸி தலைமையை அக்கட்சி வலுவாக ஆதரிப்பதாகவும், அவர் இன, மத வேறுபாடின்றி நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறார் என்றும் மக்கள் சக்தி கட்சி பாராட்டியது.

எதிர்காலத்தில் மாநில நிர்வாக சபை (Exco) அணியில் இணையவும், இந்திய சமூகத்தின் குரலை உயர்த்த மாநில நிர்வாக மட்டத்திற்கு நேரடியாக கொண்டு செல்லவும் நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

புத்ரி வங்சா தொகுதியை முன்னிட்டு மக்கள் சக்தி கட்சி மூன்று முக்கிய இலக்குகளை முன்வைத்துள்ளது.

அவை: சிறு தொழில்முனைவோரின் சமூக-பொருளாதார முன்னேற்றம், B40 பிரிவினரின் கல்வி நலன், மற்றும் உள்ளூர் அடிப்படை கட்டமைப்புகளின் மேம்பாடு ஆகும்.

இந்த விருப்பம் விரைவில் பாரிசான் நேஷனல் (BN) உயர்மட்ட குழு ஆலோசனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிகாமாட்,ஏப்.30-
சுங்கை மூவார் வெள்ளத்தடுப்பு திட்டம் (RTB) கட்டம் 3, பகுதி 1 மற்றும் 2 (சுங்கை ஜெமெந்தா) ஆகியவற்றின் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களைச் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சருமான யுனேஸ்வரன் ராமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்ற நிலையை மதிப்பீடு செய்வதோடு, உண்மை மற்றும் துல்லியமான தகவல்களை சிகாமாட் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை  இந்த ஆய்வு பயணம் நோக்கமாகக் கொண்டது.

குறிப்பாக, ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு இந்தத் திட்டம் மிகுந்த நம்பிக்கையைக் ஏற்படுத்தியுள்ளது.

சிகாமாட் பகுதி, கடுமையான மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. 2006-ஆம் ஆண்டு மற்றும் 2023-ஆம் ஆண்டு நிகழ்ந்த பெருவெள்ளங்கள் இதன் தீவிரத்தைக் காட்டின. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் மிகப்பெரிய முயற்சியாக இந்த வெள்ளத்தடுப்பு திட்டம் அமல்படுத்தப்படுகின்றது.

RTB கட்டம் 3, பகுதி 1 திட்டத்தின் ஒப்பந்த மதிப்பு RM461 மில்லியனாகவும், மொத்த செலவு RM558 மில்லியனாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 கிலோமீட்டர் நீளத்தில் அமையும் இந்தத் திட்டம் 23 ஜூலை 2024 அன்று தொடங்கப்பட்டு, 22 ஜூலை 2029 அன்று நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 35 விழுக்காட்டிற்கும் மேலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் முக்கிய பணிகள் நிலம் சுத்திகரிப்பு, நிலப்பணிகள், ஆற்றின் அகல விரிவாக்கம் மற்றும் ஆழப்படுத்தல், அதிவேகக் கால்வாய் அமைத்தல், கரைகள் அமைத்தல் மற்றும் வெளியேற்ற அமைப்புகள் கட்டுமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இந்தத் திட்டம் கம்போங் செபராங் பத்து படாக், கம்போங் போகோ மற்றும் கம்போங் சோடான் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் சுமார் 22,000 மக்களுக்கு நேரடி நன்மையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சுங்கை ஜெமெந்தாவில் அமைந்துள்ள RTB கட்டம் 3, பகுதி 2 திட்டப்பகுதியையும் யுனேஸ்வரன் ஆய்வு செய்தார். 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2029ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நிறைவடையும் என திட்டமிடப்பட்டிருந்தாலும், பணிகளை விரைவுபடுத்தும் முயற்சிகள் காரணமாக 2027ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

ஆய்வின் போது, திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் தயார்நிலையைப் பார்த்து யுனேஸ்வரன் மனநிறையை வெளிப்படுத்தினார். இதற்கு அரசாங்கத் துறைகள், தொழில்நுட்ப பிரிவுகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2023- ஆம் ஆண்டு ஏற்பாட்ட வெள்ளத்தை நேரில் பார்வையிட்டு, உடனடி நிதி ஒதுக்கீட்டை அறிவித்த பிரதமருக்குச் சிகாமாட் நாடாளுமன்ற அலுவலகம் நன்றியைத் தெரிவித்து கொள்வதாக யுனேஸ்வரன் கூறினார்.

இந்த RTB திட்டம் ஒரு சாதாரண கட்டுமானத் திட்டமாக அல்லாமல், மக்களின் உயிர், சொத்து மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முக்கியமான தேசிய முயற்சியாகும்.

இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், அதன் பலன் மக்களுக்கு முழுமையாக சென்றடைய உறுதி செய்வதாகவும் யுனேஸ்வரன் உறுதியளித்தார்