loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஜொகூர் பாரு, ஏப். 29- 

ஜொகூர்  மாநிலத் தேர்தலை (PRN16) முன்னிட்டு, புத்ரி வங்சா  சட்டமன்றம் (DUN) தொகுதியில் தங்களது வேட்பாளரை நிறுத்துவதற்கான  விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக மலேசிய மக்கள் சக்தி கட்சி   அறிவித்துள்ளது.

மக்கள் சக்தி கட்சியின் ஜொகூர் மாநில துணைத் தலைவர் ஜேம்ஸ் செல்வநாதன் கூறுகையில், தங்களது அடிமட்ட உறுப்பினர்களிடமிருந்து  இந்திய பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையும், மக்கள் தொகை ஆய்வுகளின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், தெப்ராவ் பகுதியில் கட்சியின் இயந்திரம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கலப்பணி செய்ய முழுமையான தயார்நிலை ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் , ஜொகூர் மந்திரி புசார் ஓன் ஹாபிஸ் காஸி தலைமையை அக்கட்சி வலுவாக ஆதரிப்பதாகவும், அவர் இன, மத வேறுபாடின்றி நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறார் என்றும் மக்கள் சக்தி கட்சி பாராட்டியது.

எதிர்காலத்தில் மாநில நிர்வாக சபை (Exco) அணியில் இணையவும், இந்திய சமூகத்தின் குரலை உயர்த்த மாநில நிர்வாக மட்டத்திற்கு நேரடியாக கொண்டு செல்லவும் நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

புத்ரி வங்சா தொகுதியை முன்னிட்டு மக்கள் சக்தி கட்சி மூன்று முக்கிய இலக்குகளை முன்வைத்துள்ளது.

அவை: சிறு தொழில்முனைவோரின் சமூக-பொருளாதார முன்னேற்றம், B40 பிரிவினரின் கல்வி நலன், மற்றும் உள்ளூர் அடிப்படை கட்டமைப்புகளின் மேம்பாடு ஆகும்.

இந்த விருப்பம் விரைவில் பாரிசான் நேஷனல் (BN) உயர்மட்ட குழு ஆலோசனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிகாமாட்,ஏப்.30-
சுங்கை மூவார் வெள்ளத்தடுப்பு திட்டம் (RTB) கட்டம் 3, பகுதி 1 மற்றும் 2 (சுங்கை ஜெமெந்தா) ஆகியவற்றின் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களைச் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சருமான யுனேஸ்வரன் ராமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்ற நிலையை மதிப்பீடு செய்வதோடு, உண்மை மற்றும் துல்லியமான தகவல்களை சிகாமாட் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை  இந்த ஆய்வு பயணம் நோக்கமாகக் கொண்டது.

குறிப்பாக, ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு இந்தத் திட்டம் மிகுந்த நம்பிக்கையைக் ஏற்படுத்தியுள்ளது.

சிகாமாட் பகுதி, கடுமையான மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. 2006-ஆம் ஆண்டு மற்றும் 2023-ஆம் ஆண்டு நிகழ்ந்த பெருவெள்ளங்கள் இதன் தீவிரத்தைக் காட்டின. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் மிகப்பெரிய முயற்சியாக இந்த வெள்ளத்தடுப்பு திட்டம் அமல்படுத்தப்படுகின்றது.

RTB கட்டம் 3, பகுதி 1 திட்டத்தின் ஒப்பந்த மதிப்பு RM461 மில்லியனாகவும், மொத்த செலவு RM558 மில்லியனாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 கிலோமீட்டர் நீளத்தில் அமையும் இந்தத் திட்டம் 23 ஜூலை 2024 அன்று தொடங்கப்பட்டு, 22 ஜூலை 2029 அன்று நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 35 விழுக்காட்டிற்கும் மேலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் முக்கிய பணிகள் நிலம் சுத்திகரிப்பு, நிலப்பணிகள், ஆற்றின் அகல விரிவாக்கம் மற்றும் ஆழப்படுத்தல், அதிவேகக் கால்வாய் அமைத்தல், கரைகள் அமைத்தல் மற்றும் வெளியேற்ற அமைப்புகள் கட்டுமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இந்தத் திட்டம் கம்போங் செபராங் பத்து படாக், கம்போங் போகோ மற்றும் கம்போங் சோடான் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் சுமார் 22,000 மக்களுக்கு நேரடி நன்மையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சுங்கை ஜெமெந்தாவில் அமைந்துள்ள RTB கட்டம் 3, பகுதி 2 திட்டப்பகுதியையும் யுனேஸ்வரன் ஆய்வு செய்தார். 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2029ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நிறைவடையும் என திட்டமிடப்பட்டிருந்தாலும், பணிகளை விரைவுபடுத்தும் முயற்சிகள் காரணமாக 2027ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

ஆய்வின் போது, திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் தயார்நிலையைப் பார்த்து யுனேஸ்வரன் மனநிறையை வெளிப்படுத்தினார். இதற்கு அரசாங்கத் துறைகள், தொழில்நுட்ப பிரிவுகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2023- ஆம் ஆண்டு ஏற்பாட்ட வெள்ளத்தை நேரில் பார்வையிட்டு, உடனடி நிதி ஒதுக்கீட்டை அறிவித்த பிரதமருக்குச் சிகாமாட் நாடாளுமன்ற அலுவலகம் நன்றியைத் தெரிவித்து கொள்வதாக யுனேஸ்வரன் கூறினார்.

இந்த RTB திட்டம் ஒரு சாதாரண கட்டுமானத் திட்டமாக அல்லாமல், மக்களின் உயிர், சொத்து மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முக்கியமான தேசிய முயற்சியாகும்.

இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், அதன் பலன் மக்களுக்கு முழுமையாக சென்றடைய உறுதி செய்வதாகவும் யுனேஸ்வரன் உறுதியளித்தார்

கோலாலம்பூர், ஏப் 29 —
இளம் தலைமுறையை குற்றச் செயல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஇகா பிரிகேட் பிரிவினர் கோலாலம்பூர் போலீஸ் படையுடன் இணைந்து குற்றச்செயல் தடுப்பு கருத்தரஙகை ஏற்பாடு செய்தது.

கோலாலம்பூரிலுள்ள 15 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் குற்றச்செயல்களை துணிச்சலுடன் நிராகரிக்கும் மனப்பாங்கையும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் திறனையும் வளர்க்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு வடிவமைக்கப்பட்டது.

சமூகத்தில் அதிகரித்து வரும் பல்வேறு சவால்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் செயல்படும் தலைமுறையை உருவாக்குவது முக்கிய இலக்காகக் இது அமைந்தது.

இந்நிகழ்வின் நிறைவு விழாவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தார்.

காவல் துறை மற்றும் கல்வித் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முக்கியமான அம்சமாக அமையும் என அவர் வலியுறுத்தினார்.

புலாபோல், ஜாலான் செமாராக் பகுதியில் உள்ள டேவான் டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கூட்டரசு பிரதேசத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பரவலாக பங்கேற்றனர்.

மேலும், காவல் துறை அதிகாரிகள் நேரடியாக கலந்து கொண்டு குற்றச்செயல்களின் அபாயங்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.

கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, பள்ளி மாணவர்களிடம் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது என கூறலாம்.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் இலக்கவியல் திறனை மேம்படுத்தும் திட்டங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான இலக்கவியல் தலைமைத்துவம் மற்றும் மடானி கல்வி உருமாற்றுக் கருத்தரங்கம் 2026 மூன்று நாட்கள் நடைபெற்றது.

மலாக்காவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) இலக்கவியல் சிறப்பு கருத்தரங்கை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தமிழ்ப்பள்ளிகள் தமிழாசிரியர் கழகம், இலக்கவியல் அமைச்சு மற்றும் கல்வியமைச்சு இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.

2030க்குள் மலேசியாவை செயற்கை நுண்ணறிவு முன்னேற்ற நாடாக மாற்றும் இலக்குடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலக்கவியல் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25.5% பங்களிப்பு செய்துள்ளதாகவும், 2030க்குள் அதை 30% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், கல்வித் துறையில் இலக்கவியல் தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில், மாணவர்களின் திறன் மேம்பாட்டில் பள்ளிகளும் தலைமை ஆசிரியர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என அவர் வலியுறுத்தினார். இதன் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கவியல் துறையில் பள்ளிகளின் திறனை வளர்க்க அமைச்சு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

அத்துடன், மாநில அளவிலும் இலக்கவியல் தலைமைத்துவ பயிற்சிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சிகள் இனி அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்தரங்கில் 470 தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். மலேசிய இலக்கவியல் கூட்டுறவு நிறுவனத் தலைவர் மற்றும் Asia School of Business நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பேராசிரியர் டாக்டர் டாவிட் ஆசிர்வாதமும் சிறப்பு சொற்பொழிவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமையாசிரியர்கள், இந்த இலக்கவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சிகள் தங்களது திறனை மேம்படுத்த உதவியாக இருந்ததாகவும், எதிர்காலத்தில் மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன என்றும் தெரிவித்தனர்.

புத்ராஜெயா, ஏப்.22-

டுரியான் துங்கால்  துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை குறித்து சட்டத்துறை தலைவர் (AG) வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜாசேகாவின் தேசிய தலைவரும்  டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் டிஜிட்டல் அமைச்சருமான கோபின் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து சுமார் ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக தெளிவான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை தெரிகிறது.

இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆதரிக்கும் வகையில் ஒலிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து விளக்கம் கோருவது முற்றிலும் நியாயமானது.

இது பொதுமக்கள் சார்ந்த ஒரு முக்கிய விவகாரம். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தங்களுக்கு நீதி மற்றும் நியாயமான பதில்கள் கிடைக்கப்பட வேண்டும் என  எதிர்பார்க்கின்றனர்.

எனவே இந்த வழக்கின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை சட்டத்துறை தலைவர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோபின் சிங் அறிக்கை விடுத்துள்ளார்.