loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஜெம்போல், ஜூலை 25 –

அரசியல் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, கொள்கை உறுதி, மிதவாத அணுகுமுறை மற்றும் தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கும் துணிச்சலை அனைத்து அரசியல் தலைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிலாங்கூர் பிகேஆர் தேர்தல் பிரிவு இயக்குநர் டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து மலேசியர்களின் உரிமைகளை உறுதி காக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ள மஇகா தலைவர் டான் ஸ்ரீ  விக்னேஸ்வரனின் கருத்தை அவர் வரவேற்றார்.

பாஸ் கட்சித் தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சை விக்னேஸ்வரன் கண்டித்திருப்பது, இனவாத அரசியலை நிராகரித்து, நாட்டில் நல்லிணக்கத்தை விரும்பும் பெரும்பான்மை மலேசியர்களின் உணர்வை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

மேலும், பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி முகமட் நோர், மலேசிய சீன மற்றும் இந்திய சமூகங்களின் நாட்டுப்பற்றை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் பொறுப்பற்ற செயலாகும் என்றும், அது தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியரும் சீனரும் இந்நாட்டில் "வந்தேறிகள்" அல்ல என்றும், மலேசியாவில் பிறந்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்து, மாமன்னருக்கும் நாட்டிற்கும் முழுமையான விசுவாசத்துடன் வாழும் உண்மையான மலேசியர்கள் என்றும் டாக்டர் சத்தியா பிரகாஷ் வலியுறுத்தினார்.

அரசியல் கட்சி வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் கொள்கை நிலைப்பாட்டை மதிப்பிடக் கூடாது என்றும், தற்போதைய அரசியல் சூழலில் எளிதல்லாத நிலையிலும் தாம் நம்பும் கொள்கையை வெளிப்படையாக முன்வைத்த விக்னேஸ்வரனின் துணிச்சலை பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

"அவர் மஇகாவைச் சேர்ந்தவர்; நான் பிகேஆரைச் சேர்ந்தவன். ஆனால் சரியான விஷயத்தை யார் சொன்னாலும் அதை பாராட்ட வேண்டும். கொள்கையைப் பாதுகாக்கும் துணிச்சல், மிதவாதம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மலேசிய உணர்வை மதிக்க வேண்டும்," என்றார்.

மலேசியா பல இன மக்களின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாடு என்றும், மலேசிய குடியுரிமை கொண்ட ஒவ்வொருவரும் இந்த நாட்டின் அங்கம்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நலன் மற்றும் மக்களின் ஒற்றுமை தொடர்பான விடயங்களில், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தங்களது கொள்கை நிலைப்பாட்டை தைரியமாக வெளிப்படுத்தும் தலைவர்கள் அதிகரிக்க வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"இந்தக் கருத்து யாரையும் புகழ்வதற்கோ அல்லது எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பேசுவதற்கோ அல்ல. மலேசிய மக்கள் முதிர்ச்சியான அரசியலையே விரும்புகிறார்கள் என்ற நம்பிக்கையால்தான் இதை கூறுகிறேன்," என்று டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

ஸ்ரீ தஞ்சோங், ஜூலை 24–
தேசிய முன்னணியின் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அச்சுதன் அழகன், தாம் வெற்றி பெற்றால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், ஸ்ரீ தஞ்சோங் மீனவர் பகுதியை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தனது தந்தை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர் என்பதாலும், தாமும் அந்தத் தொழிலின் அனுபவத்தை பெற்றிருப்பதாலும், மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நன்கு அறிந்திருப்பதாக அவர் கூறினார்.

மீனவர் சங்கத்தினருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது மீன்பிடித் தளமாக உள்ள இந்தப் பகுதியை தேவையான வசதிகளுடன் மேம்படுத்தி, சுற்றுலாத் தலமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தற்போது மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் பொதுச் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், அவர்கள் தங்களது உழைப்புக்கேற்ற வருமானத்தை முழுமையாகப் பெற முடியாத நிலை இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

எனவே, மீனவர்கள் தாங்களே தங்களது மீன்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில், அதற்கென முறையான விற்பனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மீனவர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்பதால், அவர்கள் தமக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அச்சுதன் அழகன் கூறினார்.

சிரம்பான், ஜூலை 22 –
பாஸ் மற்றும் தேசிய முன்னணி இடையே தற்போது உருவாகியுள்ள புதிய அரசியல் கூட்டணியை மட்டும் வைத்து அல்லாமல், அவற்றின் நிர்வாகப் பதிவு, அரசியல் கொள்கைகள் மற்றும் கூட்டணியின் அடிப்படை நோக்கங்களை ஆராய்ந்து நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று சிலாங்கூர் கெஅடிலான் தேர்தல் பிரிவு இயக்குநர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் பாஸ் மற்றும் தேசிய முன்னணி இணைந்து செயல்பட்ட காலகட்டத்தை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அக்காலத்தில் அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

"அரசியல் கூட்டணி என்பது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஏற்பாடு மட்டுமல்ல. அது நாட்டின் எதிர்கால திசை, நிர்வாகத்தின் நிலைத்தன்மை மற்றும் கூட்டணியின் கொள்கைகள் மீது மக்களுக்கு ஏற்படும் நம்பிக்கையையும் தீர்மானிக்கிறது. இந்தக் கூட்டணி உண்மையில் மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதா அல்லது அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கத்திற்காக மட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது," என்றார்.

உலு சிலாங்கூர் கெஅடிலான் கிளைத் தலைவருமான அவர், முன்பு வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த கட்சிகள் தற்போது ஒன்றிணைந்திருப்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானது என்றார்.

"முன்னர் பெரும் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகள் இன்று அதிகாரத்திற்காக இணைகின்றன என்றால், அவர்களின் கொள்கைகள் மாறிவிட்டதா அல்லது அரசியல் தேவைக்கேற்ப மாற்றப்பட்டதா என்பதை மக்கள் அறிய உரிமையுடையவர்கள். இந்த மாற்றத்தின் அடிப்படை என்ன என்பதையும், மக்களின் நலனே முன்னுரிமை பெறும் என்பதற்கான உத்தரவாதம் என்ன என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

முதிர்ச்சியான அரசியல் என்பது கூட்டணி அமைப்பதைத் தடுக்காது என்றாலும், அது தெளிவான கொள்கை, மக்களிடம் நேர்மை மற்றும் நல்லாட்சிக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் டாக்டர் சத்திய பிரகாஷ் வலியுறுத்தினார்.

"அதிகாரம் கிடைக்கும் போது கொள்கைகளை கைவிடக் கூடாது; அரசியல் லாபத்திற்காக மட்டுமே கொள்கைகளை பயன்படுத்தவும் கூடாது. ஏனெனில், அரசியல்வாதிகளின் வார்த்தைகளை மக்கள் மறந்தாலும், அவர்களின் செயல்பாடுகளையும் ஆட்சிப் பதிவையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்," என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர், ஜூலை 21 – மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 137 தொகுதிகளில் ஒரே நேரத்தில் மாபெரும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படவுள்ளதாக மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா தெரிவித்தார்.

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மொத்தம் ஏழு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றில் கூட்டு பிரார்த்தனை, குடும்ப விழா, விளையாட்டுப் போட்டி மற்றும் மருத்துவ முகாம் ஆகிய நான்கு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

அடுத்த நிகழ்வாக, வரும் 26ஆம் தேதி காலை 7.00 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 137 மஇகா தொகுதிகளிலும் ஓட்டப்பந்தயம் ஒரே நேரத்தில் நடைபெறும். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 1,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தேசிய அளவிலான தொடக்க நிகழ்ச்சி கோலாலம்பூர் தாமான் தித்திவங்சாவில் நடைபெறவுள்ளது. இதில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்து தொடக்கி வைப்பார்.

மக்களிடையே உடல்நல விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த ஓட்டப்பந்தயம் நடத்தப்படுவதாக டத்தோ முருகையா தெரிவித்தார். குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் உடற்பயிற்சியில் போதிய ஈடுபாடு காட்டுவதில்லை என்பதால், அவர்களை உடற்பயிற்சியில் ஈடுபடுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி அமையும் என்றார்.

இந்த தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தின் ஒருங்கிணைப்பாளராக டத்தோ எஸ்.எம். முத்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிரம்பான் ஜெயா, ஜூலை 20 – சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக எண் 1-இல் போட்டியிடும் ஆர். தினாளன், இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது தேர்தல் பிரச்சார அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் இடம்பெறும் என்றும், சிரம்பான் ஜெயா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான வாக்குறுதிகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தாம் அரசியலுக்கு புதிதானவர் அல்ல என்றும், தனது தந்தை ராஜகோபாலின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நீண்ட காலமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தினாளன் குறிப்பிட்டார்.

சிரம்பான் ஜெயா மக்களை சந்தித்தபோது, விளையாட்டுத் திடல்கள் இல்லாதது, தெருவிளக்குகள் போதுமான அளவில் இல்லாதது, கல்வி வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியது உள்ளிட்ட பல்வேறு குறைகளை மக்கள் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, மேற்கல்வி தொடர விரும்பும் இளைஞர்களுக்கு அதிகமான கல்வி வாய்ப்புகளையும் தேவையான ஆதரவுகளையும் ஏற்படுத்துவதற்கு தேசிய முன்னணியுடன் இணைந்து மஇகா பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வரவிருக்கும் தேர்தலில் சிரம்பான் ஜெயாவில் நீல அலை எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறிய ஆர். தினாளன், தொகுதி மக்களிடம் தேசிய முன்னணிக்கு ஆதரவு அளித்து எண் 1-க்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.