loader
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை; ஸ்ரீ தஞ்சோங் மீனவர் பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்! – அச்சுதன் அழகன்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை; ஸ்ரீ தஞ்சோங் மீனவர் பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்! – அச்சுதன் அழகன்

ஸ்ரீ தஞ்சோங், ஜூலை 24–
தேசிய முன்னணியின் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அச்சுதன் அழகன், தாம் வெற்றி பெற்றால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், ஸ்ரீ தஞ்சோங் மீனவர் பகுதியை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தனது தந்தை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர் என்பதாலும், தாமும் அந்தத் தொழிலின் அனுபவத்தை பெற்றிருப்பதாலும், மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நன்கு அறிந்திருப்பதாக அவர் கூறினார்.

மீனவர் சங்கத்தினருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது மீன்பிடித் தளமாக உள்ள இந்தப் பகுதியை தேவையான வசதிகளுடன் மேம்படுத்தி, சுற்றுலாத் தலமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தற்போது மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் பொதுச் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், அவர்கள் தங்களது உழைப்புக்கேற்ற வருமானத்தை முழுமையாகப் பெற முடியாத நிலை இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

எனவே, மீனவர்கள் தாங்களே தங்களது மீன்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில், அதற்கென முறையான விற்பனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மீனவர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்பதால், அவர்கள் தமக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அச்சுதன் அழகன் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News