சிரம்பான், ஜூலை 20 –
"Ini Kali Lah" என்ற தேர்தல் முழக்கம் தற்போது தேசிய முன்னணி (பிஎன்) பக்கம் திரும்பியுள்ளதாகவும், மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ அசோஜன் தெரிவித்தார்.
சிரம்பான் ஜெயா தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ தினாளன் ராஜகோபாலுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அவர், நெகிரி மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், அவற்றில் 25 தொகுதிகளில் தேசிய முன்னணி களமிறங்கியுள்ளதாக கூறினார். இதில் இரண்டு தொகுதிகளில் மஇகா வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்றார்.
நான்கு தவணைகளாக ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) வசம் இருந்து வந்த சிரம்பான் ஜெயா தொகுதியில், இம்முறை மஇகா வேட்பாளர் டத்தோ தினாளன் ராஜகோபால் போட்டியிடுவது மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொகுதியில் சுமார் 27 விழுக்காடு இந்திய வாக்காளர்களும், 45 விழுக்காடு சீன வாக்காளர்களும் உள்ளனர். வேட்பாளர் தினாளன் ராஜகோபால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்னோ மற்றும் மசீச கட்சியினரும் இணைந்து களப்பணியை முன்னெடுத்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
பிரச்சாரத்தின் போது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலையிலேயே இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், குறிப்பாக சீன வாக்காளர்களிடமிருந்தும் மீண்டும் தேசிய முன்னணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதை உணர முடிகிறது என்றும் டத்தோ அசோஜன் கூறினார்.
சிரம்பான் ஜெயா தொகுதியில் கடுமையான போட்டி நிலவினாலும், மக்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு தேசிய முன்னணிக்கு புதிய நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 Comments