ஜொகூர் பாரு, ஏப். 29-
ஜொகூர் மாநிலத் தேர்தலை (PRN16) முன்னிட்டு, புத்ரி வங்சா சட்டமன்றம் (DUN) தொகுதியில் தங்களது வேட்பாளரை நிறுத்துவதற்கான விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக மலேசிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.
மக்கள் சக்தி கட்சியின் ஜொகூர் மாநில துணைத் தலைவர் ஜேம்ஸ் செல்வநாதன் கூறுகையில், தங்களது அடிமட்ட உறுப்பினர்களிடமிருந்து இந்திய பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையும், மக்கள் தொகை ஆய்வுகளின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், தெப்ராவ் பகுதியில் கட்சியின் இயந்திரம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கலப்பணி செய்ய முழுமையான தயார்நிலை ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் , ஜொகூர் மந்திரி புசார் ஓன் ஹாபிஸ் காஸி தலைமையை அக்கட்சி வலுவாக ஆதரிப்பதாகவும், அவர் இன, மத வேறுபாடின்றி நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறார் என்றும் மக்கள் சக்தி கட்சி பாராட்டியது.
எதிர்காலத்தில் மாநில நிர்வாக சபை (Exco) அணியில் இணையவும், இந்திய சமூகத்தின் குரலை உயர்த்த மாநில நிர்வாக மட்டத்திற்கு நேரடியாக கொண்டு செல்லவும் நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
புத்ரி வங்சா தொகுதியை முன்னிட்டு மக்கள் சக்தி கட்சி மூன்று முக்கிய இலக்குகளை முன்வைத்துள்ளது.
அவை: சிறு தொழில்முனைவோரின் சமூக-பொருளாதார முன்னேற்றம், B40 பிரிவினரின் கல்வி நலன், மற்றும் உள்ளூர் அடிப்படை கட்டமைப்புகளின் மேம்பாடு ஆகும்.
இந்த விருப்பம் விரைவில் பாரிசான் நேஷனல் (BN) உயர்மட்ட குழு ஆலோசனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 Comments