கோலாலம்பூர்,மார்ச்3-
2027-ஆம் ஆண்டு முதல் ஆறு வயதில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அமல்படுத்தப்பட உள்ள நிலையில், ஐந்து வயது குழந்தைகளுக்குத் தரத்தை உள்ளடக்கிய கல்வி கிடைப்பதை உறுதி செய்ய நாடு முழுவதுமுள்ள 1,781 அரசின் பெர்பாடுவான் பாலர் பள்ளிகளின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
நாடாளுமன்றத்தில் செனட்டர் டத்தோ டாக்டர் ஹாஜி முஸ்தபா மூசா எழுப்பிய கேள்விக்குத் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர், யுனேஸ்வரன் ராமராஜ் இவ்வாறு பதிலளித்தார்.
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு துறை (JPNIN) மூலம் இந்தப் பாலர் பள்ளிகளின் திறனைக் கட்டம் கட்டமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தேவைகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பாலர் பள்ளியின் வகை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாணவர் சேர்க்கை திறன் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கிடைக்கக் கூடிய இடங்களை முழுமையாகப் பயன்படுத்தி, உள்ளூர் தேவைக்கேற்ப மாணவர் சேர்க்கை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
மேலும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்னணி, வளர்ச்சி நிலை மற்றும் கல்வி தேவைகள் உள்ளிட்ட முழுமையான சுயவிவரங்கள் உருவாக்கப்பட்டு, கல்வி அணுகுமுறை மேலும் உள்ளடக்கியதாகவும் சமூக தேவைகளுக்கு ஏற்பவும் வடிவமைக்கப்படுவதை அவர் உறுதிப்படுத்தினார்.
நீண்ட காலமாக, 2021–2030 கல்வி திட்டத்தின் கீழ் இந்தப் பாலர் பள்ளிகள் வலுப்படுத்தப்பட்டு, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நாட்டுப்பற்று மதிப்புகளை மேம்படுத்தும் முக்கிய கல்வி அமைப்பாகச் செயல்படுகின்றன என்பதையும் யுனேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.
0 Comments