அமெரிக்க ஏவுகணைகளை அடுத்து தற்போது பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவில் வடகொரிய முகாம்களை உக்ரைன் குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஏவுகணைகளை ரஷ்யா நகரங்கள் மீது தாக்குதலுக்கு பயன்படுத்தலாம் என ஜோ பைடன் நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை பயன்படுத்தும் அனுமதியும் உக்ரைன் பெற்றுள்ளது.
இந்த நிலையில், வடகொரியாவின் இராணுவ தளபதிகள் தங்கியிருந்த முகாம்கள் மீது உக்ரைன் Storm Shadow ஏவுகணைகளை பயன்படுத்தி, முதல் முறையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு உலக நாடுகள் பல கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஜோ பைடன் நிர்வாகம் தங்களின் ஆயுதங்களை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தும் அனுமதியை வழங்கியிருந்தது.
தொடர்ந்து பிரித்தானியாவும் Storm Shadow ஏவுகணை தொடர்பில் அனுமதி அளித்துள்ளது. இந்த திடீர் நகர்வுகள் மற்றும் ரஷ்யாவின் கடும்போக்கு நடவடிக்கைகள் மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஒருபகுதியாக தங்களின் அணு ஆயுத பயன்பாடு தொடர்பிலான கோட்பாட்டை ரஷ்யாவும் திருத்தியுள்ளது. இதுவும் பல மேற்கத்திய நாடுகளை அச்சத்தில் தள்ளியுள்ளது.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் குர்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள சுரங்க கட்டுப்பாட்டு அறையில் தங்கியிருந்த வடகொரியாவின் தளபதிகள் மற்றும் ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
0 Comments