கோலாலம்பூர், டிச.26-
பகாங், லிப்பிஸ் மண்ணின் மைந்தரான 26 வயது உடற்பயிற்சி பயிற்றுநர் டாக்டர் ஜெய்பிரபாகரன் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 12 மணி நேரம் இடைவிடாது கார்டியோ எடைத் தூக்கும் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து உலக சாதனை, மலேசிய சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஒரே நேரத்தில் இரண்டு சாதனைகளை படைத்திருக்கும் ஜெய் டிரேட்மில், டம்பெல், பார்பிள் உட்பட 20க்கும் மேற்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி எடைத் தூக்குவதில் சாதனை படைத்தார்.
இப்பொழுது அதன் தொடர் முயற்சியாக அடுத்த ஆண்டு புதிய உலகம் மற்றும் ஆசிய சாதனையை படிப்பதற்கு அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை 5 மாதங்களுக்கு தீவிர பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சொன்னார்.
வாரத்தில் 6 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 முறை இப்பயிற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்த புதிய முயற்சி முன்பை விட மிக சவாலானதாக இருக்கும். அதனை எதிர்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக ஜெய் தெரிவித்தார்.
தமக்கு பக்க பலமாக இருந்து ஆசியும் ஆதரவும் வழங்கி வரும் தாயார் எஸ்.சுகுணமலர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஜெய் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
ஜெய்யின் இந்த முயற்சி வெற்றியடைந்து அவர் இன்னும் பல சாதனைகளை புரிய தமிழ்லென்ஸ் வாழ்த்துகிறது.
0 Comments