loader
'புலனாய்வி'ல் ஷைலா நாயருக்கு அழுத்தம் கொடுத்த ஷாலினி!

'புலனாய்வி'ல் ஷைலா நாயருக்கு அழுத்தம் கொடுத்த ஷாலினி!

(வெற்றி விக்டர்)

 

கோலாலம்பூர்  அக்டோபர்- 21

சாய்பா விஷன் தயாரிப்பில்  இயக்குனர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 'புலனாய்வு' திரைப்படத்தில், படத்தின் இயக்குநர் ஷாலினி நாயகியான ஷைலா நாயருக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளாதாகத் தெரியவந்துள்ளது. 

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் டத்தின் ஸ்ரீ ஷைலா நாயரிடம், ஷாலினி பாலசுந்தரம் கதையைச் சொன்னபோது, சுமார் நான்கு மணி நேரம் கதையைச் சொன்னதாகவும், கதையைக் கேட்ட ஷைலா நாயர்  கதை நன்றாக இருப்பதாகக் கூறியதோடு, கதையில் வரும் முக்கிய போலீஸ் வேடத்தை ஏற்று நடிப்பது யார் எனவும் ஷாலினியிடம் கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த ஷாலினி, புதுமுகம்தான் நடிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். 

அப்படியானால், அந்த முக்கிய வேடத்திற்குச் சரியான ஒரு பெண்ணைத் தேர்வு செய்யுங்கள் என ஷைலா கூற, அந்தப் பெண் நீங்கள்தான் என ஷாலினி கூற, உடனே, ஒரு கம்பீரமான பெண்ணைத் தெரிந்தெடுங்கள் என  ஷைலா சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

இதுவரை உங்களை இந்தத் திரை உலகம் ஒரு மென்மையான நாயகியாகவும், இனிமையான பாடகியாகவும் மட்டுமே பார்த்துள்ளது என ஷைலாவிடம் கூறிய ஷாலினி, இந்த மாதிரி  பார்த்தது இல்லை. இது உங்களின் புதுமுகமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். 

முயற்சிப்பதாகக் கூறிய ஷைலா, நான் பொதுவாகவே மென்மையாகப் பேசக் கூடிய நபர், காரசாரமாகவும், விரைப்பாகவும் இருப்பது இயல்பாகவே வாராது. இருந்தாலும், முயற்சிக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அந்தக் கதாப்பாத்திரம் சரியாக வரவில்லை என்றால்,  வேறு ஒருவரைத் தேடிடுங்கள் என ஷைலா கூறியிருக்கிறார்.

இந்நிலையில் அந்தக் கதாப்பாத்திரத்திற்காக நடிப்புப் பயிற்சியில் இருந்த ஷைலாவிற்குத் தடுமாற்றம்  ஏற்பட்டபோது, தயவுசெய்து இந்தக் கதாப்பத்திரத்திற்கு வேறோருவரைத் தேடுங்கள் என ஷைலா நாயர் சொல்லியும் அதைக் கேட்காமல் ஷைலா நாயர்தான் இப்படத்தில் நடிக்கவேண்டும் எனத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துள்ளார் ஷாலினி.

இது தனக்கு ஒரு சவால் என  போலீஸ் துறையின் விசாரணை முறை எப்படி இருக்கும், அவர்களது நடை பாவனைகள், பேச்சு உடை போன்றவற்றை ஆய்வு செய்துள்ளார் ஷைலா. இதற்குப் படத்தின் இயக்குனர் குழுவும் ஷைலா நாயருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அதோடு அவருடன் இத்திரைப்படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த  துணை நடிகர்களும், ஷைலா நாயரை ஒரு மாஸ் போலீஸ் போல் காட்டுவதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

இப்படத்திற்கு இசை அமைத்த ராகவேந்திராவும் தீவிரமாக உழைத்திருக்கிறார்.  

கதையின் முக்கிய நாயகி ஷைலா நாயரை வேறொரு தோற்றத்தில் காட்ட வேண்டும் என்ற  நோக்கத்தில், அவருக்கு ஊக்கமும் அழுத்தமும் கொடுத்திருக்கிறார் ஷாலினி பாலசுந்தரம். அந்த வகையில் அண்மையில் நடந்த 'புலனாய்வு' பாடல் வெளியீட்டில், படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. அதில் படக் குழுவினர்களான இயக்குனர் ஷாலினி, இசை அமைப்பாளர் ராகவேந்திரா, நாயகன் கபில்  ஆகியோர், இப்படத்தில் ஒரு மாறுபட்ட ஷைலா நாயரைப் பார்க்கலாம் என நம்பிக்கையோடு தெரிவித்தனர். விழாவிற்கு வந்தவர்களும் ஷைலாவா? இது என ஆச்சரியத்தோடு பாராட்டு தெரிவித்துள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News