சிட்னி, மே.25-
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாண துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் உலோகங்கள் உருக்கும் ராட்சத எந்திரங்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்றை சோதனை செய்துள்ளனர்.
அந்த எந்திரங்களை என்ஜினீயரிங் வல்லுனர்களை கொண்டு ஆராய்ந்தபோது அவற்றின் உள்ளே பாலித்தீன் பாக்கெட்டுகளில் போதைப்பொருள் இருந்தது தெரிந்தது.
300 கிலோ அளவில் மெத்தபேட்டமைன் என்னும் உயர்ரக போதைப்பொருளை கைப்பற்றி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட இருந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் எந்த நாட்டில் இருந்து வந்தது, கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
0 Comments