ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் தங்கள் வாழ்க்கையே மாறி விட்டதாகவும் மக்கள் தங்களிடம் செல்ஃபி கேட்டு அன்புத் தொல்லை தருவதாகவும், பொம்மன் - பெள்ளி தம்பதியினர் வெட்கப்பட்டு கூறியுள்ளனர். சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ஆஸ்கர் விருது வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில் ஆவணப்படத்தில் முக்கிய கேரக்டரில் இடம்பெற்ற பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர் நியூஸ் 18 நடத்தி வரும் மாநாட்டில் வீடியோ கால் வழியே பங்கேற்றனர். அதில் அவர்கள் கூறியதாவது-
ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் எங்களது வாழ்க்கையே மாறிவிட்டது. எங்களுக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மக்கள் எங்களை மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் பார்க்கிறார்கள். தங்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளுமாறு அவர்கள் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர். குட்டி யானையை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உங்கள் குடும்பத்தில் ஏதேனும் எமர்ஜென்சி ஏற்பட்டாலும், கூட உங்களால் யானை குட்டியை விட்டு சென்றுவிட முடியாது. அதனை எப்போதும் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
0 Comments