கோலாலம்பூர் ஆகஸ்ட்- 9
மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார அறவாரியம் (எம்.ஐ.எஸ்.சி.எஃப்) மற்றும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் விளையாட்டுப் பகுதி இணை ஏற்பாட்டில், ஆசியா எறி பந்து ஃபெடரேஷன் ஒருங்கிணைப்பில், நாளை (10.8.2019) சனிக்கிழமை, சுபாங் ஜெயா ஸ்டேடியம் 3k அரங்கில் இந்தியா - மலேசியா எறிபந்து விளையாட்டுப் போட்டி நடைபெறவிருப்பதாக எம்.ஐ.எஸ் சி.எஃப் தலைவரும், ம.இ.காவின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.
ஆசியா எறிபந்து ஃபெடரேஷன் செயலாளர் டாக்டர் எஸ்.மணி தலைமையில், இந்தியாவில் இருந்து பெண்கள் அணி இப்போட்டியில் கலந்துகொள்கிறார்கள். அந்த ஃபெடரேஷன் குழுவின் பயிற்றுனர்கள் குழு, இங்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பெண்கள் அணிகளுக்குப் பயிற்சி வழங்கியுள்ள நிலையில், நாளை இந்திய அணியுடன், மலேசிய அணி விளையாடவிருப்பதாக டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.
பெண்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்த விளையாட்டில், இப்போது ஆண்கள் - பெண்கள் என இரு பிரிவு உள்ளது. ஆசியாவைப் பொறுத்தவரை 9 நாடுகள் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதாகவும், 10-வது நாடாக மலேசியா தற்போது இணைந்துள்ளதாகவும் டத்தோ டி.மோகன் தெரிவித்தார். வரும் காலத்தில் ஆசிய போட்டிகளில் இணைக்கும் முயற்சியையும் இந்த ஃபெடரேஷன் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விளையாட்டுப் போட்டிக்கு பிறகு, ம.இ.கா இளைஞர் பிரிவின் முயற்சியில், மலேசியாவில் சில பயிற்றுனர்களுக்குப் பயிற்சி வழங்கி, மாநில ரீதியில் இளைஞர்களுக்கு ஓராண்டு காலம் எறிபந்து பயிற்சிகள் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின் எம்.ஐ.எஸ்.சி.எஃப் தலைமையில், மாநில ரீதியிலும் தேசிய ரீதியிலும் போட்டிகளை நடத்தி, தேசிய ரீதியில் வெற்றி பெறும் அணியை மலேசியாவைப் பிரதிநிதித்து எறிபந்து போட்டிகளுக்கு அனுப்பி வைப்போம் என டத்தோ டி. மோகன் கூறினார். அதன் முதல் படியாக இந்த ஆட்டம் அமையும் என அவர் தெரிவித்தார். விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், நாளை நடக்கும் ஆட்டத்தைக் காண அழைக்கப்படுவதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்!
0 Comments