(வெற்றி விக்டர்)
பெட்டாலிங் ஜெயா ஜூன் -11
மலேசிய இந்திய திரைப்பட இயக்குனர் சங்கத்தின் கலை நிகழ்ச்சிக்கு வருகை அளித்த மனிதநேய மாமனி ரத்னவள்ளி அம்மையார் கலைஞர்களுக்கு உதவி செய்தே தாம் ஓய்ந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இந்நாட்டில் உள்ள கலைஞர்கள் திறமைசாலிகள்தான். வாய்ப்பும், முறையான பண வசதியும், வருமானமும் இருந்தால் நம் கலைஞர்கள் கொடிகட்டிப் பறப்பார்கள். என்னைப் போன்று அல்லது தொழிலதிபர் ஒம்ஸ் தியாகராஜன் போன்றவர்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்படாது.
ஆனால் இங்குச் சூழலோ வேறு. அதனால் என்னை நாடி உதவி கேட்கும் கலைஞர்களுக்கு என் சொந்தப் பணத்தைக் கொடுத்து ஓய்ந்துவிட்டேன்.
அமைச்சர் கோபிந்த் சிங் நம் நாட்டுக் கலைஞர்களுக்கு நல்லது செய்வேன் என வாக்குறுதி அளித்துள்ளார். மகிழ்ச்சியாக உள்ளது. கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த சில நடவடிக்கைகளை அமைச்சர் செய்யவேண்டும் என ரத்னவள்ளி அம்மையார் கேட்டுக்கொண்டார்.
மலேசியாவிற்கு அதிகமான இந்திய கலைஞர்கள் வருகிறார்கள்; கலை நிகழ்ச்சிகள் செய்கிறார்கள்; வருமானம் ஈட்டிச் செல்கிறார்கள். எனக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்த வாய்ப்பை உள்ளூர்க் கலைஞர்களுக்கு வழங்கினால் நல்லது என ரத்னாவள்ளி அம்மையார் கூறியதும், அரங்க. அதிர எழுந்தது கரகோசம். அந்தக் கரகோச அலை ஓய்வதற்குள், உள்ளுர்க் கலைஞர்கள் மீது ஓர் அம்பை வீசினார் அம்மையார்.
இப்போது கைதட்டுவீர்கள், இந்திய கலைஞர்கள் வந்தவுடன், அவர்களிடம் புகைப்படம் எடுக்க அலைமோதுவீர்கள் என ரத்னவள்ளி அம்மையார் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
உள்நாட்டுக் கலைஞரோ, வெளிநாட்டுக் கலைஞரோ இருவரும் கலைஞர்கள்கள்தான். எனவே நம்ம கலைஞர்கள் புகைப்படம் எடுக்க அலைமோதாதீர்கள். அவர்கள் தரத்திற்கு உங்களை நினைத்து கெத்தாக இருங்கள் என ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார்!
0 Comments