கோலாலம்பூர் மே -15
இது வரையில் 15 தடவைக்கும் மேல் மனிதவள அமைச்சர் குலசேகரனைச் சந்தித்தும், இந்திய பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டு வரும் வணிகர்கள் எதிர்நோக்கும் அந்நிய தொழிலாளர் பிரச்னைக்குத் தீர்வே பிறக்கவில்லை என, மலேசிய இந்திய கொல்லர்கள் - நகை வணிகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நகைக்கடை என்பது பாரம்பரியமிக்க தொழில். இதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே ஈடுபட முடியும். ஆனால், இப்போது அந்நிய தொழிலாளர் பற்றாக்குறையால், எங்களால் தொழிலை நடத்தச் சிரமமாக உள்ளது எனக் கூறிய டத்தோ அப்துல் ரசூல், லெபோ அம்பாங்கில் சில நகைக்கடைகள் உட்பட, உணவகம், ஜவுளிக் கடைகளும் அடைக்கபட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் இது தொடர்ந்தால், லெபோ அம்பாங் தனது வணிகத் தோற்றத்தையே இழக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.
நாங்கள் பிரதமரை நம்பித்தான் இருக்கிறோம். பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒருவரால் மட்டுமே இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காணமுடியும். எனவே, இந்திய பாரம்பரிய தொழில்துறை எதிர்நோக்கியுள்ள அபாயத்தை பிரதமர் பார்வைக்குக் கொண்டு செல்வோம். இந்திய வர்த்தகச் சமூகத்தின் கடைசி ஆயுதம் பிரதமர் அலுவலகத்தின் முன் கருப்புக் கொடி ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபடுவதுதான். இதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், வேறு வழி தெரியவில்லை என டத்தோ அப்தூல் ரசூல் தெரிவித்தார்!
0 Comments